பெட்ரோல் கார்களுக்கு டீலர் கமிஷனை உயர்த்திய மாருதி

பெட்ரோல் அடிக்கடி உயர்த்தப்பட்டதால், கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் கார் வி்ற்பனை சரிவடைந்துள்ளது. எனவே, பெட்ரோல் கார் விற்பனையை அதிகரிக்க கடந்த ஆண்டு இறுதியிலும், புத்தாண்டு பிறந்தபோதும் ஏராளமான சலுகைகளை பல்வேறு நிறுவனங்கள் வாரி வழங்கின.
மேலும், விலையையும் அரை லட்சம், ஒரு லட்சம் என்று வாய்க்கு வந்தபடி அதிரடியாக குறைத்து தூள் பரத்தின. இந்த நிலையில், பெட்ரோல் கார் விற்பனையை அதிகரிக்க வாடிக்கையாளர்களை கவர்வது ஒருபுறம் இருந்தாலும், டீலர்களை கவனிக்க வேண்டியது முக்கியம் என்ற முடிவுக்கு மாருதி வந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக டீலர் கமிஷனை உயர்த்தாமல் இருந்து வந்த மாருதி தற்போது பெட்ரோல் கார்களுக்கான டீலர் கமிஷனை உயர்த்தியுள்ளது. ஆல்ட்டோ, எஸ்டீலோ, வேகன் ஆர் ஆகிய கார்களுக்கு 1,000 ரூபாயும், ரிட்ஸ் பெட்ரோல் காருக்கு 1,500 ரூபாயும், எஸ்எக்ஸ்-4 கார் விற்றால் தற்போது 2,000 ரூபாயும் டீலருக்கு கூடுதலாக கிடைக்கும்.
மார்க்கெட்டில் மாருதிதான் டீலர்களுக்கு குறைந்த கமிஷன் வழங்குகிறது. வோக்வேகன், ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் டீலர்களுக்கு 7 சதவீதம் வரை கமிஷன் வழங்குகின்றன. ஆனால், மாருதி நிறுவனம் டீலர்களுக்கு வெறும் 4 சதவீதம் மட்டுமே கமிஷனாக வழங்குகிறது.
ஆனால், அதிக கார்களை விற்பனை செய்வதால் மாருதி டீலர்களுக்கு அது பெரிய பிரச்னையாக இல்லை. இந்த நிலையில், கூடுதல் கமிஷன் கிடைக்கும் என்பதால், பெட்ரோல் கார் விற்பனைக்கு டீலர்கள் கூடுதல் முக்கியத்துவம் தருவார்கள் என்று மாருதி நம்புகிறது.


Click it and Unblock the Notifications








