ரேஸ்டிராக்கில் தெருநாய் ஓடி வருவதை தடுக்க சிறப்பு ஏற்பாடுகள்

கடந்த ஆண்டு இந்தியாவில் முதன்முறையாக பார்முலா 1 கார் பந்தயம் நடந்தன. போட்டிகள் துவங்கிய முதல் நாள் பயிற்சி போட்டியின்போது ரேஸ் டிராக்கில் தெருநாய் குறுக்கே ஓடி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கார்கள் சீறிப் பாய்ந்து சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
ஒருவழியாக கார்களுக்கு சிவப்பு கொடி காண்பித்து நிறுத்திய பின் நாயை பிடித்து அப்புறப்படுத்தினர். இந்த நிலையில், இந்த ஆண்டு ரேஸ் டிராக்கில் நாய்கள் குறுக்கே வருவதை தடுக்க பல்வேறு முன்னேற்பாடுகளை போட்டி ஏற்பாட்டாளர்கள் செய்துள்ளனர்.
முதலில் அல்ட்ராசோனிக் சாதனங்களை பொருத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், கடந்த ஓர் ஆண்டில் 40 ரேஸ்கள் வரை நடத்தப்பட்டுள்ள நிலையில் தெருநாய் தொந்தரவு இல்லாததால், இந்த திட்டத்தை கைவிடப்பட்டது.
மேலும், தெருநாய்கள் உள்ளே நுழைவதாக கருதப்படும் வாயில்கள் சீல் வைக்கப்பட்டதோடு, இரண்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இதுதவிர, சந்தேகப்படும் இடங்களில் நாய் பிடிப்பதற்காகவே சிலரை நியமித்துள்ளதாக புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த ஆண்டு பார்முலா 1 போட்டிகளின்போது நாய்கள் குறுக்கே வராது என்று வீரர்கள் நம்பி சீறிப்பாய்ந்து செல்லலாம் என அவர்கள் நம்பிக்கை கொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








