குடிபோதையில் காரை ஓட்டி 7 வாகனங்களை காலி செய்த டிரைவர்

பசவனகுடி, கவி கங்காதரேஷ்வரா கோயில் அருகில் போலீசார் நேற்றிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த டிசையர் காரை ஒன்றை நிறுத்த முற்பட்டுள்ளனர். ஆனால், கார் நிற்காமல் சென்றுள்ளது.
இதையடுத்து, அந்த காரை போலீசார் பைக்கில் விரட்டி சென்றதாக தெரிகிறது. இதனால், அதிவேகமாக சென்ற அந்த கார் பசவனகுடி, லட்சுமிபுரா 7வது கிராசில் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதி நின்றது.
இதில், 6 இருசக்கர வாகனங்கள் உள்பட 7 வாகனங்கள் சேதமடைந்தன. பின்னர் காரை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். இதில், காரை ஓட்டி வந்தது மஞ்சுநாத் (24) என்பதும், மது அருந்திவிட்டு காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்தது.
போலீசுக்கு பயந்து வேகமாக காரை ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக பிடிபட்ட டிரைவர் தெரிவித்துள்ளார். அந்த கார் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது.
இதையடுத்து, அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மக்கள் நடமாட்டம் சற்று குறைந்த நேரத்தில் விபத்து நடந்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
குடிபோதை டிரைவிங் வேண்டாமே:
நம் நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 1.35 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பதாக தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. இதில், பெரும்பாலான விபத்துக்களுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதே காரணம் என்றும் தெரிவித்துள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவது அவருக்கு மட்டுமல்ல எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. எனவே, குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை கண்டிப்பாக தவிருங்கள்.


Click it and Unblock the Notifications








