பட்ஜெட்டில் எலக்ட்ரிக் கார்களுக்கு ஒரு பிரயோஜனமுமில்லை- ரேவா அதிகாரி பேட்டி

கடந்த வெள்ளியன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பொது பட்ஜெட்டில் கார்கள் மீதான உற்பத்தி வரி கணிசமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால், கார் விற்பனையில் சறுக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எலக்ட்ரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு கூடுதல் சலுகைகள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக பட்ஜெட்டில் எலக்ட்ரிக் கார்களுக்கும் வரிகள் உயர்த்தப்பட்டிருப்பதால், எலக்ட்ரிக் கார் விற்பனையில் மேலும் சுணக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இதனால், எலக்ட்ரிக் கார்களின் விலை ஒரு சதவீதம் முதல் 1.5 சதவீதம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சேத்தன் மெயினி கூறுகையில்," பட்ஜெட்டில் கார்களுக்கான அடிப்படை கலால் வரி 5 முதல் 6 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், கார் விலை 1 சதவீதம் அதிகரிக்கும். இதேபோன்று, கார் உற்பத்திக்கான உதிரிபாகங்கள் மீதான கலால் வரியும் 10 லிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
லித்தியம் அயான் பேட்டரிகளுக்கான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சிவிடி வரி 5 லிருந்து 6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், பேட்டரியின் விலை உயரும். இதனால், ஒரு பிரயோஜனமும் இல்லை.
எலக்ட்ரிக் கார் தயாரிப்பையும், விற்பனையையும் ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட்டில் ஒரு அறிவிப்பும் இல்லாதது பெரும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது," என்று அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications








