எலக்ட்ரிக் கார் விற்பனையை ஊத்தி மூட வைத்த மத்திய அரசு!

சுற்றுச் சூழலை பாதுகாக்கவும், மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையிலும் பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை(எம்என்ஆர்இ) வரிச் சலுகை வழங்கி வந்தது.
எலக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு ரூ.4,000 முதல் ரூ.5,000 வரையிலும், எலக்ட்ரிக் கார்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் வரிச் சலுகை வழங்கப்பட்டு வந்தது.
இந்த வரிச் சலுகை கடந்த நிதியாண்டுடன் காலாவதியாகிவிட்டது. இதனால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் எலக்ட்ரிக் வாகன விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர் விற்பனை 75 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஒரு எலக்ட்ரிக் கார் கூட விற்பனையாகவில்லையாம்.
வாகன தயாரிப்பாளர்கள் ஒரு பக்கம் கடும் நஷ்டமடைந்து வரும் நிலையில், டீலர்கள் பாடு பெரும் திண்டாட்டமாகியுள்ளதாம். சில டீலர்கள் தொழிலை மாற்றியுள்ள நிலையில், பலர் ஷோரூமை இழுத்து பூட்டிவிட்டு தொழிலுக்கு குட்பை சொல்லிவிட்டனராம்.
இந்த நிலையில், எலக்ட்ரிக் கார்களுக்கான வரிச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








