பார்முலா-1 கார் பந்தயம் இன்று துவக்கம்: டெல்லியில் குவியும் ரசிகர்கள்

இந்தியன் கிரான்ட் ப்ரீ என்று கூறப்படும் முதல்நிலை கார் பந்தயங்கள் இந்தியாவில் கடந்த ஆண்டு முதன்முறையாக நடந்தன. டெல்லி அருகே நொய்டாவில் கட்டப்பட்ட பிரம்மாண்ட கார் பந்தய களத்தில் இந்த போட்டிகள் நடந்தன.
இந்த நிலையில், இரண்டாம் ஆண்டு பார்முலா 1 கார் பந்தயங்கள் இன்று காலை புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் துவங்கியது. இன்றும், நாளையும் பயிற்சி மற்றும் தகுதிச் சுற்று போட்டிகள் நடக்கின்றன. வரும் ஞாயிற்றுக் கிழமை மதியம் இறுதிச் சுற்று நடக்கிறது.
கடந்த ஆண்டு கட்டுமானப் பணிகளில் சில குறைகள் இருந்ததாக புகார் எழுந்தது. ஆனால், இந்த ஆண்டு முழுவதுமாக பணிகள் முடிக்கப்பட்டதுடன் வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், டெல்லியில் பார்முலா 1 போட்டிகளை காண்பதற்காக உள்நாடு மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். இதனால் போலீஸ் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
போலி டிக்கெட் விற்பனை:
இதனிடையே, போட்டியை நடத்தும் ஜேபி இன்டர்நேஷனல் குழுமத்தின் அங்கீகாரம் பெற்ற டிக்கெட் விற்பனையாளர் என்ற போர்வையில் 'Eventogp.com' என்ற இணையதளம் போட்டிக்கான போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
ரூ.1,000 கட்டணத்தை பெற்றுக்கொண்டு இந்த இணையதளத்தில் போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து உஷார்படுத்தியுள்ள ஜேபி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் bookmyshow.com என்ற இணையதளத்தை மட்டுமே தங்களது அதிகாரப்பூர்வ டிக்கெட் விற்பனையாளராக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








