டிரக்கில் மோதி ரேஸ் கார் பயங்கர விபத்து: கண்ணை இழந்த வீராங்கனை

ஸ்பெயினை சேர்ந்தவர் மரியா டி வில்லோட்டா(32). ரஷ்யாவை சேர்ந்த மருஷியா எப்1 பார்முலா ஒன் அணியின் டெஸ்ட் டிரைவராக கடந்த மார்ச்சில் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், லண்டனின் வடபகுதியில் உள்ள கார் பந்தய டிராக்கில் மருஷியா எப்1 அணியின் ரேஸ் காரை அவர் முதன்முறையாக நேற்று சோதனை செய்தார். முதலாவது சுற்று முடியும் தருவாயில் அவர் ஓட்டிய பந்தய கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்றுகொண்டிருந்த அந்த அணியின் சப்போர்ட் டிரக்கில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் மரியா படுகாயமடைந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கேம்பிரட்ஜில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் கூறுகையில்," மரியாவுக்கு முகம் மற்றும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
மருத்துவக் குழுவினர் உதவியுடன் அவருக்கு நீண்ட நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து அவர் மீண்டு வருகிறார்.
இருந்தாலும், அவர் தனது வலது கண்ணை முற்றிலும் இழந்துவிட்டார். தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்," என்றார்.
விபத்தில் சிக்கிய மரியாவுக்கு பார்முலா ஒன் வீரர்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








