ஜெனிவா மோட்டார் ஷோவில் புதிய சூப்பர் காரை அறிமுகப்படுத்தும் ஃபெராரி
இத்தாலியை சேர்ந்த ஃபெராரி நிறுவனம் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமாக திகழ்கிறது. வடிவமைப்பு, செயல் திறன் என்று அனைத்து வகையிலும் அசத்தும் ஃபெராரி கார்களுக்கு உலக அளவில் ரசிகர் கூட்டம் இருக்கிறது.
இந்த நிலையில், எப்12 பெர்லினேட்டா என்ற பெயரில் புதிய சூப்பர் காரை ஃபெராரி தயாரித்துள்ளது. ஃபெராரியின் பிரபல மாடலான 599 ஜிடிபி காருக்கு மாற்றாக இந்த புதிய சூப்பர் காரை அந்த நிறுவனம் அறிமுகம் செய்கிறது.
வரும் 6ந் தேதி ஜெனிவா மோட்டார் ஷோவில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 599 ஜிடிபி காரை விட நீளம் குறைவாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் கையாளுமையில் இன்னும் சிறப்பாகவும், அதிக பேலன்சுடன் செல்லும் என்று ஃபெராரி தெரிவித்துள்ளது.
ஃபெராரியின் கார்களில் இந்த புதிய கார்தான் அதிவேகம் கொண்ட காராக இருக்கும். ஆம். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 340 கிமீ வேகத்தில் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்12 பெர்லினேட்டாவில் 6262 சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
இந்த எஞ்சின் 730 பிஎச்பி ஆற்றலையும், 590 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். மேலும், 0-100 கிமீ வேகத்தை வெறும் 3.1 வினாடிகளிலும், 0-200 கிமீ வேகத்தை வெறும் 8.5 வினாடிகளில் எட்டும் திறன் கொண்டது எப்-12 பெர்லினேட்டா.
சர்வதேச மார்க்கெட்டில் ரூ.2.1 கோடி விலையில் விற்பனைக்கு வரும் இந்த புதிய கார் இந்தியாவில் இறக்குமதியை சேர்த்து ரூ.4 கோடி விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னரே, வாசகர்களுக்கு புதிய எப்-12 பெர்லினேட்டா காரை பல்வேறு கோணங்களில் காணும் வாய்ப்பை டிரைவ் ஸ்பார்க் வழங்குகிறது. கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து கண்டு களியுங்கள்.
(ஃபெராரி எப்-12 பெர்லினேட்டா கேலரிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்)


Click it and Unblock the Notifications









