புதிய எஸ்யூவி கார்களை களமிறக்குவதாக ஃபியட் அறிவிப்பு
எஸ்யூவி கார்களுக்கு இருக்கும் வரவேற்பை பார்த்து, ஃபியட்டும் புதிய எஸ்யூவி கார்களை களமிறக்குவதாக அறிவித்துள்ளது.
நம் நாட்டு மார்க்கெட்டில் நீண்ட காலமாக இருந்தும் ஜொலிக்க முடியாமல் போன ஒரே வெளிநாட்டு நிறுவனமாக ஃபியட்டைதான் கூறும் நிலை இருக்கிறது. வர்த்தகத்தை மேம்படுத்தும் விதமாக டாடா மோட்டார்ஸ் கூட்டணியை உதறித் தள்ளிவிட்டு தற்போது தனித்து களமிறங்கியுள்ளது ஃபியட்.

மேலும், கார் மார்க்கெட்டில் தற்போது 0.5 சதவீத மார்க்கெட் பங்களிப்பை மட்டுமே ஃபியட் கொண்டிருக்கிறது. இதை 4.5 சதவீதமாக அதிகரிக்க திட்டம் வைத்துள்ளது. இதற்காக, அடுத்தடுத்து புதிய எஸ்யூவி கார் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஃபியட் திட்டமிட்டுள்ளது.
எஸ்யூவி மார்க்கெட் நல்ல வளர்ச்சி கண்டு வருவதால் காம்பெக்ட் ரகம் மற்றும் பிரிமியம் ரகம் என அனைத்து ரகத்திலும் புதிய எஸ்யூவி மாடல்களை வரிசை கட்ட ஃபியட் முடிவு செய்துள்ளது.
ஃபியட் இந்தியா வர்த்தகப் பிரிவு தலைவர் என்ரிகோ அடனேஷியோ கூறுகையில்," மார்க்கெட் பங்களிப்பை அதிகரித்துக் கொள்வதற்காக புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக, எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
கார் மார்க்கெட்டில் முன்னணி வகிக்கும் அனைத்து நிறுவனங்களும் புதிய எஸ்யூவி மாடல்களுடன் களமிறங்கி வரும் நிலையில், ஃபியட் நிறுவனமும் புதிய எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளதால் எஸ்யூவி மார்க்கெட்டில் கடும் போட்டி ஏற்படும் என்று தெரிகிறது.
குறிப்பு: படத்தில் இருப்பது மாதிரி ஃபியட் கார்


Click it and Unblock the Notifications








