டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் முடிவு: கார் நிறுவனங்கள் அச்சம்

பெட்ரோல் விலையை விட டீசல் விலை மிக குறைவாக இருக்கிறது. டீசலுக்கு மத்திய அரசு வழங்கி வரும் மானியம்தான் காரணம். இந்த நிலையில், பெட்ரோல் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருவதால் டீசல் கார்கள் மீதான மோகம் அதிகரித்துள்ளது.
அதிக மைலேஜ், குறைந்த எரிபொருள் செலவு உள்ளிட்ட காரணங்களால் விலை அதிகமாக இருந்தாலும் டீசல் கார்களை வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால், டீசல் நுகர்வு அதிகரித்து வருகிறது.
மானிய விலையில் வழங்கப்படும் டீசல், அதிகமாக கார்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக சமீபத்தில் எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், பெரிய வணிக வளாகங்கள் மற்றும் நிறுவனங்கள் டீசலில் இயங்கும் ஜெனரேட்டர்களை பயன்படுத்தி வருகின்றன.
இதனால், மானியம் வழங்கப்படுவதற்கான நோக்கம் பயனற்று விட்டதால், டீசல் மானியத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கைகள் விடப்பட்டு வருகின்றன.
ஆனால், டீசல் மானியத்தை ரத்து செய்தால் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்படும். மேலும், விலைவாசி தாறுமாறாக உயர்ந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது.
இதனால், டீசல் மானியத்தை ரத்து செய்ய முடியாத நிலையில் மத்திய அரசு இருக்கிறது. இந்த நிலையில், மானிய விலையில் கிடைக்கும் டீசலில் இயங்கும் கார்களை வசதி படைத்தவர்கள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதிக்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டீசல் கார் விற்பனை அதிகரித்துள்ளதால் புதிய டீசல் எஞ்சின் ஆலைகளை கட்டும் திட்டங்களை பல்வேறு நிறுவனங்கள் துரிதப்படுத்தியுள்ளன. இதற்காக, பெரும் முதலீட்டை செய்யவும் அந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
இந்த நிலையில், டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் கார் நிறுவனங்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








