அராய் மையத்தில் ஃபோர்டு குகா சோதனை: விரைவில் வருகிறதா?

2015ம் ஆண்டுக்குள் 8 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்யப் போவதாக ஃபோர்டு ஏற்கனவே அறிவித்தது. அதில், முதலாவதாக கடந்த ஆண்டு குளோபல் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட ஃபியஸ்ட்டா அறிமுகம் செய்யப்பட்டது.
ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அடுத்து முற்றிலும் மறுவடிவமைப்பு பெற்ற எண்டெவர் எஸ்யூவியை ஃபோர்டு அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் புத்தம் புதிய குகா கிராஸ்ஓவர் ரக காரை விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர ஃபோர்டு திட்டமிட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. புனேயிலுள்ள அராய் சோதனை மையத்தில் ஃபோர்டு குகா சமீபத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
அரசுத் துறை நிறுவனமான அராய் அமைப்புதான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் விற்பனைக்கு விடுவதற்கான தகுதி சான்றிதழ் வழங்கி வருகிறது. எனவே, விரைவில் குகாவை அறிமுகம் செய்யும் பொருட்டு அராய் சோதனைக்கு குகா உட்படுத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.
அசத்தலான வடிவமைப்பு கொண்ட இந்த காரில் 1.6 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். மேனுவல் மற்றும் பவர்ஷிப்ட் டூவல் கிளட்ச் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல்களில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த கார் மஹிந்திரா எக்ஸ்யூவி 500, ஸ்கோடா யெட்டி ஆகிய எஸ்யூவிகளுக்கு நேரடி போட்டியை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications








