விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு இலவச சிகிச்சை திட்டம்: ஆகஸ்ட்டில் அமலுக்கு வருகிறது

பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு தக்கவாறு விபத்துக்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. மேலும், விபத்துக்களில் சிக்கி காயமடைவோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் பலர் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.
இதை தவிர்க்கும் வகையில் புரட்சிகரமான முன்னோடி திட்டம் ஒன்றை மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் செயல்படுத்த உள்ளது. சாலை விபத்துக்களில் சிக்கி காயமடைவோருக்கு முதல் 48 மணி நேரத்திற்கான இலவச சிகிச்சையை வழங்கும் இந்த திட்டம் சோதனை அடிப்படையில் வரும் ஆகஸ்ட்டில் அமல்படுத்தப்பட உள்ளது.
புகழ்பெற்ற மத வழிபாட்டு தலங்களான பொற்கோயில் மற்றும் வைஷ்ணவி தேவி கோயிலை இணைக்கும், பதான்கோட்- அமிர்தசரஸ் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் இந்த திட்டம் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
108 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த நெடுஞ்சாலையில் ஒரு நாளைக்கு 75,000 வாகனங்கள் கடந்து செல்கின்றன. மேலும், கடந்த நிதி ஆண்டில் மட்டும் இந்த நெடுஞ்சாலையில் நடந்த 2410 விபத்துக்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். எனவே, இந்த நெடுஞ்சாலையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட் முதல் இந்த நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் பட்சத்தில், காயமடைவோருக்கு அருகிலுள்ள மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கி காயமடைவோரை உடனடியாக அனுமதிக்குமாறு அந்த நெடுஞ்சாலையின் அருகிலுள்ள 231 மருத்துவமனைகளை பஞ்சாப் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், விபத்து நடந்த இடத்திற்கு 10 நிமிடங்களுக்குள் செல்லும் வகையில் கூடுதல் ஆம்புலன்ஸ்கள் தயாராக நிறுத்தப்பட்டிருக்கும். இதற்காக, பிரத்யேக கால் சென்டர்களும் அமைக்கப்படுகின்றன.
அடுத்து 4 நெடுஞ்சாலைகளிலும் சோதனை அடிப்படையில் தேசிய விபத்துக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.
தேசிய விபத்துக் காப்பீட்டு திட்டம் செயல்படும் விதம்:
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வாகனத்துக்கும் மூன்றாம் நபர் விபத்துக் காப்பீட்டு கட்டணத்தில் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது. இத்திடத்திற்கு ஆண்டுக்கு 750 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
சிகிச்சை செலவுக்கான உச்சவரம்பாக ரூ.30,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக மாநில அரசுகளுக்கு 25 கோடி முதல் 30 கோடியை மத்திய அரசு தொகுப்பு நிதியாக வழங்கும். விபத்தில் சிக்கி காயமடைபவர்களுக்கு முதலில் இந்த தொகுப்பு நிதியிலிருந்து செலவு செய்யப்படும். மாவட்ட நிர்வாகங்கள் வழியாக இவை கையாளப்பட உள்ளது.
பின்னர், சிகிச்சைக்கான செலவை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும். 48 மணி நேரத்திற்கு பின்னரும் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற நேர்ந்தால் அவருக்கு சலுகை அடிப்படையில் சிகிச்சை அளிக்கவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
இந்த செலவை மத்திய சுகாதார திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். மேலும், அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி காயமடைவோருக்கும் முதல் 48 மணிநேரத்திற்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








