டெல்லி பார்முலா-1 ரேஸ் டிராக்கில் சொந்த காரை ஓட்டி பார்க்க அரிய வாய்ப்பு!

இந்தியாவின் முதல் பார்முலா-1 பந்தய டிராக் டெல்லி அருகேயுள்ள நொய்டாவில் ஜேபி ஸ்போர்ட்ஸ் குழுமம் கட்டியுள்ளது. இதில், கடந்த ஆண்டு இந்தியாவின் பார்முலா-1 பந்தயங்கள் நடைபெற்று முடிந்தன. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் கார் பந்தயங்களுக்கான மவுசு வெகுவாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நொய்டாவிலுள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் பார்முலா-1 பந்தய டிராக்கில் சொந்த காரை ஓட்டி பார்க்கும் அரிய வாய்ப்பை ஜேபி ஸ்போர்ட்ஸ் குழுமம் வழங்கியுள்ளது. 50 பேருக்கு மட்டும் இந்த வாய்ப்பை வழங்கப்பட இருப்பதாக ஜேபி குழுமம் தெரிவித்துள்ளது.
இதற்காக, ரூ.15,000 கட்டணமாக செலுத்த வேண்டும். வரும் பிப்ரவரி 19ந் தேதி காலை 8.30 மணிமுதல் மாலை 5 மணி வரை ரேஸ் டிராக்கில் காரில் வலம் வரலாம். டிரைவிங் லைசென்ஸ், கார் ஆர்சி புக், கார் இன்ஸ்யூரன்ஸ் ஆகியவை கட்டாயம்.
தவிர, மோட்டார்ஸ்போர்ட்ஸ் இன்ஸ்யூரன்ஸ் ஒன்றையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இது, ரூ.1,000 பிரிமியம் கொண்டதாக இருக்கும். நல்ல கண்டிசனில் உள்ள டயர்கள், எமர்ஜென்சி பிரேக்குகளை கொண்ட கார்களாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 பேர் ஏற்கனவே முன்பதிவு செய்துவிட்டதாகவும், வரும் 20ந் தேதி வரை ரூ.15,000 கட்டணத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும், அதற்கு பின் ரூ.19,000 கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும் என்றும் ஜேபி ஸ்போர்ட்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








