கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது

கடந்த ஆண்டு பெட்ரோல் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்கள் வசம் மத்திய அரசு ஒப்படைத்தது. இதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
அடிக்கடி பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் ஏப்ரல் முதல் வாரத்தில் பெட்ரோல் விலையை ரூ.8 வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கோவா அரசு மக்களுக்கு இனிப்பான செய்தியை அறிவித்துள்ளது. கோவா சட்டசபையில் 2012-13ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் மனோகர் பரிக்கல் தாக்கல் செய்தார்.
இதில், பெட்ரோல் மீது மாநில அரசு விதிக்கும் மதிப்பு கூட்டு வரி கணிசமாக குறைக்கப்படுவதாக அறிவித்தார்.. இதனால், ஒரு லிட்டருக்கு பெட்ரோல் விலை 11 ரூபாய் வரை குறையும். இனி கோவாவில் பெட்ரோல் விலை 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவிர, விமான எரிபொருளுக்கான விலையையும் கோவா அரசு குறைத்துள்ளது. பெட்ரோல் மீது மத்திய அரசும், மாநில அரசும் அவரவர் பங்குக்கு கணிசமாக வரி விதிக்கப்படுவதால்தான் பிற நாடுகளை காட்டிலும் நம் நாட்டில் பெட்ரோல் விலை அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில், கோவா அரசு பெட்ரோல் விலையை குறைத்துள்ளதை பின்பற்றி பிற மாநிலங்களும் பெட்ரோல் விலையை குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications








