கோவாவை போல பெட்ரோல் விலையை குறையுங்கள்: மத்திய அரசு வலியுறுத்தல்

கோவாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்றது. இதையடுத்து, மனோகர் பரிக்கர் தலைமையிலான அரசு பதவியேற்றது. அந்த கட்சி தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் மீதான வரி ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தது.
இதன்படி, நேற்று தாக்கல் செய்யப்பட்ட அம்மாநில பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டுவரியை கணிசமாக குறைப்பதாக முதல்வர் மனோகர் பரிக்கர் அறிவித்தார். இதனால், லிட்டருக்கு பெட்ரோல் விலை ரூ.11 வரை குறைகிறது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கோவா மாநில அரசை பின்பற்றி பிற மாநிலங்களும் பெட்ரோல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா வலியுறுத்தியுள்ளார்.
பெட்ரோல் மீது மத்திய அரசைவிட மாநில அரசுகள்தான் அதிக வரி விதிப்பதாகவும் கோவாவை முன்னுதாரணமாக கொண்டு பெட்ரோல் விலையை குறைத்து மக்களின் சுமையை குறைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பெட்ரோல் விலையை எதிர்க்கும் பிஜேபி ஆளும் மாநில அரசுகள் கோவாவை பின்பற்றி பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications








