தீபாவளிக்கு வருகிறதாம் டீசல் பிரியோ.. நம்பி வெயிட் பண்ணலாமா?

பிராண்டுக்கு நன்மதிப்பை பெற்றும் டீசல் மாடல்கள் இல்லாமல் இந்திய மார்க்கெட்டில் தடுமாறி வருகிறது. ஹோண்டா. மிட்சைஸ் மார்க்கெட்டில் கோலோய்ச்சி வந்த சிட்டி தற்போது விற்பனையில் மிகவும் பின்தங்கியுள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்துள்ள ஹோண்டா டீசல் மாடல்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு தற்போது காய்களை நகர்த்தி வருகிறது. அடுத்த ஆண்டு சிவிக் காரின் டீசல் மாடலை அறிமுகப்படுத்த போவதாக ஹோண்டாவே தகவலை பரப்பியது.
ஆனால், சிவிக் டீசல் வந்து ஹோண்டாவின் விற்பனையை எதிர்பார்த்த அளவு உயர்த்தும் என்று எதிர்பார்க்க முடியாது. சிறிய காரில் டீசல் மாடலை அறிமுகப்படுத்தினால்தான் ஓரளவு விற்பனையை உயர்த்த முடியும் என்ற ஹோண்டா அறிந்து கொண்டுவிட்டது.
இதையடுத்து, பிரியோ காரின் டீசல் மாடலை உடனடியாக களமிறக்க ஹோண்டா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் தீபாவளி பண்டிகை காலத்தில் பிரியோ டீசலை விற்பனைக்கு கொண்டு வர ஹோண்டா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
டெல்லி அருகே குர்கானில் டீசல் பிரியோ சோதனை நடத்தப்பட்டதாக டீம் பிஎச்பி தளத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், டீசல் பிரியோ தீபாவளிக்கே வருவது உறுதி என்பது போல் தற்போது செய்திகள் வெளியாகி வருவது பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.
ஹோண்டாவின் எர்த் ட்ரீம் சீரிஸ் வரிசை டீசல் எஞ்சினுடன் பிரியோ வரலாம் என்றும், டீசல் பிரியோ லிட்டருக்கு 20 முதல் 25 கிமீ வரை மைலேஜ் செல்லும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








