இயல்பு நிலைக்கு திரும்பியது ஹோண்டா கார் உற்பத்தி: வெயிட்டிங் பீரியட் குறையும்

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு கடும் சோதனை காலமாக அமைந்தது. கடந்த ஆண்டு மார்ச்சில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுனாமியால் அங்குள்ள ஹோண்டா ஆலைகளில் உற்பத்தி முற்றிலும் முடங்கியது.
இதனால், அங்கிருந்து உதிரிபாகங்கள் கிடைக்காததால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள ஹோண்டா ஆலைகளில் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
சில மாதங்கள் கழித்து அந்த பாதிப்பிலிருந்து மீண்ட ஹோண்டாவுக்கு தாய்லாந்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக மீண்டும் கார் உற்பத்தி முடங்கியது. அங்குள்ள ஹோண்டா உதிரிபாக ஆலையில் உதிரிபாகங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், இந்தியா உள்ளிட்ட கார் ஆலைகளில் உதிரிபாகங்கள் சப்ளை அடியோடு பாதிக்கப்பட்டதால் மீண்டும் கார் உற்பத்தி முடங்கியது.
இதனால், பிரியோ, ஜாஸ் கார்களுக்கான புக்கிங்கை ஹோண்டா நிறுத்தியதுடன், புதிய சிட்டி காரின் அறிமுகத்தையும் தள்ளிப்போட்டது. இறுதியாக டிசம்பரில் புதிய சிட்டியை அறிமுகம் செய்தது.
இந்த நிலையில், தற்போது தாய்லாந்து ஆலையில் உதிரிபாகங்கள் உற்பத்தி சீரடைந்துள்ளதால், டெல்லி அருகே நொய்டாவிலுள்ள ஹோண்டா கார் ஆலையில் தற்போது கார் உற்பத்தி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
ஒரு ஷிப்டில் மட்டுமே நடந்து வந்த கார் உற்பத்தி தற்போது இரண்டு ஷிப்டிலும் நடந்து வருவதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. இதனால், பிரியோ, ஜாஸ், சிட்டி கார்களை புக்கிங் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சில நாட்களில் டெலிவிரி கொடுக்க ஹோண்டா ஆயத்தமாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








