சென்னையில் கடும் டீசல் தட்டுப்பாடு; பங்குகள் மூடல்- மக்கள் பெரும் அவதி

மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில்(எம்ஆர்பிஎல்) உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னையிலுள்ள சுத்திகரிப்பு ஆலையிலிருந்து கர்நாடகாவுக்கு டீசல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை சுத்திகரிப்பு ஆலையிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுச்சேரியிலும் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு டீசல் வினியோகம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 வாரங்களாக இந்த நிலை நீடிக்கிறது. சென்னையிலுள்ள 300 பெட்ரோல் பங்குகளில் டீசல் இருப்பு இல்லாததால், பல பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டு வருகின்றன.
அனைத்து பங்குகளிலும் பெட்ரோல், டீசல் ஸ்டாக் இல்லை என்று போர்டு தொங்க விட்டுள்ளனர். சென்னை தவிர காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், டீசல் வாகனங்களை பயன்படுத்துபவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
தவிர, மின் வெட்டால் ஜெனரேட்டர் பயன்படுத்தி வரும் தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மின் வெட்டு காரணமாக தொழில்நிறுவனங்கள் டீசலில் இயங்கும் ஜெனரேட்டர்களை பயன்படுத்தி வந்த நிலையில், டீசல் தட்டுப்பாடு காரணமாக சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.
மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் மின் தட்டுப்பாடு காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், சப்ளை நிறுத்தப்பட்டது குறித்து எந்தவொரு தகவலையும் சென்னை சுத்திகரிப்பு ஆலை நிர்வாகம் தெரிவிக்கவில்லை என்று சென்னையிலுள் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, 2 கப்பல்களில் 60,000 மெட்ரிக் டன் பெட்ரோல், டீசல் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளது. எனவே, இன்னும் ஓரிரு நாளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு பிரச்னை தீரும் என்று தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








