தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சே: கார் நிறுவனங்கள் நிம்மதி பெருமூச்சு

பெட்ரோல் விலை உயர்வு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால் டீசல் கார் விற்பனை வேகமெடுத்துள்ளது. இதனால், நாட்டின் டீசல் நுகர்வு கணிசமாக அதிகரித்து வருகிறது. டீசலுக்கு வழங்கி வரும் மானியத்துக்கு திடீரென கூடுதல் நிதி ஒதுக்க வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டது. இதனை சரிகட்ட மாற்று வழியை தேடிக்கொண்டிருந்தது.
டீசல் கார்கள் மீது ரூ.2.5 லட்சம் வரை கூடுதல் வரி விதிக்க மத்திய அரசுக்கு பெட்ரோலிய துறை அமைச்சகம் பரிந்துரைத்தது. இந்த செய்தி கார் நிறுவனங்கள் வயிற்றில் புளியை கரைத்தது.
டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதித்தால், கார் விற்பனை ஒட்டுமொத்தமாக படுத்துக்கொள்ளும். எனவே, பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் பரிந்துரையை நிராகரிக்குமாறு கார் நிறுவனங்களும் வலியுறுத்தின. இதற்கு கனரக தொழிற்துறை அமைச்சகமும் வக்காலத்து வாங்கியது.
இந்தியாவில் முதலீடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என வெளிநாட்டு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுத்தன. இதுகுறித்து தீவிரமாக பரிசீலித்த மத்திய அரசு தற்போது டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்த்தியிருக்கிறது.
டீசல் விலை கணிசமாக உயர்த்தப்படிருப்பதால், விலைவாசி ஏகத்துக்கும் உயரும் என்பதால் பல்வேறு தரப்பினரும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், டீசல் விலை உயர்வுக்கு கார் நிறுவனங்கள் மட்டும் இரு கைகளையும் தட்டி வரவேற்பு தெரிவித்துள்ளன.
மேலும், 5 ரூபாய் உயர்த்தப்பட்டாலும், டீசல் கார்கள் இன்னமும் எரிபொருள் செலவில் சிக்கனமாக இருப்பதால் விற்பனையில் எந்த பாதிப்பும் இருக்காது என்று கார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
டீசல் விலை கணிசமாக உயர்த்தப்பட்டிருப்பதால், டீசல் மானியத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதிச்சுமையை மத்திய அரசு எளிதாக சமாளிக்க முடியும் என்பதால், டீசல் கார்களுக்கு கூடுதல் வரியை இப்போதைக்கு விதிக்கப்படாது என்பதால் கார் நிறுவனங்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








