ரூ.4400 கோடியில் புதிய பென்ஸ் டிரக் ஆலை: ஜெயலலிதா துவங்கி வைத்தார்
சென்னை அருகே கட்டப்பட்டுள்ள டெயம்லர் குழுமத்தின் புதிய டிரக் தயாரிப்பு தொழிற்சாலையை முதல்வர் ஜெயலலிதா இன்று துவங்கி வைத்தார்.
ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர் குழுமம் மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டில் கார் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகிறது. மேலும், டெய்ம்லர் பிராண்டில் கனரக வாகன விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தனது வர்த்தகத்தை இந்தியாவில் விரிவாக்கம் செய்யும் விதமாக கனரக வாகனங்கள் தயாரிப்பு துறையிலும் டெய்ம்லர் இறங்கியுள்ளது.

இதற்காக, பாரத் பென்ஸ் என்ற புதிய பிராண்டையும் கடந்த ஆண்டு இந்தியாவில் டெய்ம்லர் குழுமம் அறிமுகம் செய்தது. மேலும், சென்னை அருகே ஒரகடத்தில் ரூ.4000 கோடி முதலீட்டில் உலகத் தரம் வாய்ந்த கனரக வாகன தயாரிப்பு தொழிற்சாலையை கட்டியுள்ளது.
400 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையின் திறப்பு விழா இன்று நடந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா விழாவில் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி ஆலையை திறந்து வைத்தார். இந்த விழாவில் டெய்ம்லர் நிறுவனத்தின் தலைவர் டெய்ட்டர் டெட்ஸீ உள்ளிட்ட பல டெய்ம்லர் நிறுவன உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:
"சிறப்பு திட்டங்கள் மற்றும் சலுகைகள் மூலம் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதில் சென்னை முதலிடம் வகிக்கிறது. இதனால், வாகன உற்பத்தியில் ஆசிய கண்டத்தின் முக்கிய கேந்திரமாக சென்னை மாறி வருகிறது. ஏற்றுமதி மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பிலும் சென்னை முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது.
ஃபோர்டு, ஹூண்டாய், பிஎம்டபிள்யூ என பெரும்பாலான கார் தயாரிப்பு ஆலைகள் தமிழகத்தில்தான் அமைந்துள்ளன. எனவே, ஆட்டோமொபைல் துறைக்கு தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். மேலும், வாகன உற்பத்தியில் தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு வருவதே எமது லட்சியம்," என்று பேசினார்.


Click it and Unblock the Notifications








