இந்தியாவில் புதிய கார் ஆலை அமைக்கும் ஜாகுவார் லேண்ட் ரோவர்!
இந்தியாவை உற்பத்தி கேந்திரமாக பயன்படுத்தி ஏராளமான நாடுகளுக்கு அடுத்த தலைமுறை டிஃபென்டர் எஸ்யூவியை ஏற்றுமதி செய்ய ஜாகுவார் லேண்ட்ரோவர் திட்டமிட்டுள்ளது. இதற்காக, புதிய கார் ஆலை அமைப்பதற்கான பணிகளை ஜாகுவார் லேண்ட் ரோவர் முடுக்கிவிட்டுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படுகின்றன. நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த அந்த நிறுவனங்கள் டாடா புண்ணியத்தில் தற்போது நல்ல வளர்ச்சி கண்டு வருகின்றன.

மேலும், தனது வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கும் நடவடிக்கைகளை அந்த நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் புதிய ஆலை கட்டுவதற்கு ஜாகுவார் லேண்ட் ரோவர் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை தற்போது துரிதப்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா அல்லது குஜராத்தில் புதிய ஆலை கட்டுவதற்கு அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த புதிய ஆலையில் அடுத்த தலைமுறை டிஃபென்டர் எஸ்யூவியை தயாரிக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆண்டுக்கு 40000 டிஃபென்டர் எஸ்யூவியை உற்பத்தி செய்யவும், 50,000 டீசல் எஞ்சின்களையும் தயாரிக்கும் வகையில் இந்த புதிய ஆலை கட்டப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வரும் 2015ம் ஆண்டுக்குள் புதிய ஆலையில் உற்பத்தியை துவங்க ஜாகுவார் லேண்ட்ரோவர் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் 60 முதல் 80 சதவீத டிஃபென்டர் எஸ்யூவி கார்களை ஏற்றுமதி செய்ய லேண்ட்ரோவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள டாடா ஆலையில் லேண்ட்ரோவரின் ப்ரீலேண்டர்-2 எஸ்யூவி தற்போது அசெம்பிள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அடுத்த தலைமுறை டிஃபென்டருக்கு இந்தியாவில் புதிய ஆலை கட்ட வேண்டும் என்று லேண்ட்ரோவர் தீர்மானித்துள்ளது குறி்ப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications