இந்தியாவில் எஞ்சின் ஆலை: ஜாகுவார் லேண்ட்ரோவர் அறிவிப்பு

பிரிட்டனை சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு கார் நிறுவனம் தற்போது டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனை அதிகரித்து வருவதால், டாடா மோட்டார்ஸ் துணை கொண்டு இந்தியாவில் கார் விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை ஜாகுவார் லேண்ட்ரோவர் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பிற சொகுசு கார் நிறுவனங்களை விட குறைந்த விலையில் கார்களை இந்தியர்களுக்கு தரும் முயற்சிகளை ஜாகுவார் லேண்ட்ரோவர் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டில் டாடா ஆலையில் லேண்ட்ரோவர் கார்கள் அசெம்பிளிங் பணிகள் துவங்கப்பட்டன.
இதனால், பெருமளவு இறக்குமதி வரியை தவிர்க்க முடியும் என்பதால், சரியான விலையில் கார்களை விற்பனை செய்ய முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, தற்போது இந்தியாவிலேயே புதிய தனது கார்களுக்கான எஞ்சின்கலை உற்பத்தி செய்யும் வகையில், புதிய ஆலையை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜாகுவார் லேண்ட்ரோவர் தெரிவித்துள்ளது.
ஜெனிவா மோட்டார் ஷோவுக்கு சென்றுள்ள இந்திய ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர் மத்தியில் இத்தகவலை ஜாகுவார் லேண்ட்ரோவர் சிஇஓ ரால்ப் ஸ்பெத் இதனை தெரிவித்தார்.
பிரிட்டனில் உள்ள கார் எஞ்சின் ஆலைக்கு இதுவரை ரூ.285 கோடியை ஜாகுவார் லேண்ட்ரோவர் முதலீடு செய்திருக்கிறது. இந்தியாவில் கட்டப்பட உள்ள புதிய எஞ்சின் ஆலைக்கு இதைவிட சற்று குறைவான முதலீட்டை செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய எஞ்சின் ஆலை மூலம் இந்தியாவில் தனது கார்களுக்காக தேவையை சமாளிக்க முடியும் என்றும் ஜாகுவார் லேண்ட்ரோவர் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








