லைசென்ஸ் இல்லாமல் பஸ்சை ஓட்டி ஆட்டோ மீது மோதிய அமைச்சர்

கர்நாடக மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் ஆனந்த் அஸ்னோட்டிகர். இவர் நேற்று கார்வாரில் நடந்த புதிய பஸ் அறிமுகம் செய்யும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
புதிய பஸ்சை இயக்கி வைக்கவும் அவர் அழைக்கப்பட்டிருந்தார். விழாவில் கலந்து கொண்ட அவர் புதிய பஸ்சில் ஏறி ஸ்டார்ட் செய்தார். அந்த பஸ்சில் பத்திரிக்கையாளர்கள், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் இருந்தனர்.
அமைச்சர் அஸ்னோட்டிகர் பஸ்சை நகர்த்த முயற்சி செய்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து விழா நடந்த இடத்துக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோ மீது மோதியது. இதனால், பஸ்சில் இருந்த அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
நல்ல வேளையாக, ஆட்டோவில் இருந்த டிரைவர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அந்த புதிய பஸ்சும் சிறிது சேதமடைந்தது. இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய அமைச்சர் ஆனந்த் அஸ்னோட்டிகரிடம் பஸ் ஓட்டுவதற்கான ஹெவி டிரைவிங் லைசென்ஸ் இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன. இதனால், இந்த சம்பவத்தை பெரிதாக்காமல் போலீசார் பூசி மெழுகிவிட்டதாக கூறப்படுகிறது.
பொதுவாக, உரிய லைசென்ஸ் இல்லாமல் இதுபோன்று வாகனத்தை ஓட்டினால் அபராதம் விதிக்க விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், அமைச்சர் அஸ்னோட்டிகர் மீது எந்தவொரு நடவடிக்கையையும் போலீஸ் இதுவரை எடுக்கவில்லை.
கர்நாடகத்தில் ஆளும் கட்சியான பிஜேபியை சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் இதுபோன்று சர்ச்சைகளில் சிக்குவது தொடர்கதையாகியுள்ளது. அம்மாநில சட்டமன்றத்தில் செல்போனில் ஆபாச வீடியோ பார்த்ததாக சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்கள் 3 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








