5,000வது டிரக்கை உற்பத்தி செய்த மஹிந்திரா நேவிஸ்டார்!

அமெரிக்காவை சேர்ந்த நேவிஸ்டார் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து மஹிந்திரா நிறுவனம் உலகத் தரம் வாய்ந்த டிரக் மற்றும் பஸ் உள்ளிட்ட வர்த்தக வாகனங்களை தயாரித்து வருகிறது. மஹிந்திரா நேவிஸ்டார் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த கூட்டு நிறுவனத்தில் மஹிந்திராவுக்கு 51 சதவீத பங்குகளும், நேவிஸ்டாருக்கு 49 சதவீத பங்குகளும் இருக்கின்றன.
இந்த கூட்டு நிறுவனம் மஹாராஷ்டிர மாநிலம், புனே அருகிலுள்ள சகனில் பெரும் முதலீட்டில் தொழிற்சாலை அமைத்துள்ளது. இங்கு, 3.5 டன் முதல் 49 டன் எடை வரை சுமக்கும் திறன் கொண்ட டிரக்குகள் மற்றும் பஸ்களை இந்த கூட்டு நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த நிலையில், சகன் ஆலையிலிருந்து 5,000வது டிரக்கை மஹிந்திரா நேவிஸ்டார் சமீபத்தில் உற்பத்தி செய்து புதிய இலக்கை கடந்துள்ளது. இதுகுறித்து மஹிந்திரா நேவிஸ்டார் மேலாண் இயக்குனர் நலின் மேத்தா கூறுகையில்," எங்கள் கணிப்பின்படி, இந்த புதிய இலக்கை தாமதமாகவே கடந்துள்ளதாக கருதுகிறோம். இருப்பினும், தற்போது முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம்.
எங்களது விற்பனை மையங்கள் வாகன பராமரிப்பு பணிமனைகளின் கட்டமைப்பை வலுவாக்கிக் கொள்ள திட்டமிட்டுள்ளோம். மஹிந்திராவிற்கு நாடு முழுவதும் உள்ள டிராக்டர் டீலர்கள் வழியாக இந்த கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் தற்போது 56 டீலர்களும் 1,000 வாகன பராமரிப்பு பணிமனைகளும் உள்ளன. அடுத்த ஆண்டிற்குள் டீலர்கள் எண்ணிக்கையை 80 ஆகவும், வாகன பராமரிப்பு பணிமனைகளின் எண்ணிக்கையை 1,800 ஆகவும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
நடப்பு நிதி ஆண்டில் புதிய டிரக் மாடல்கள், பஸ்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவற்றை அறிமுகப்படுத்த உள்ளது மஹிந்திரா நேவிஸ்டார். இதுதவிர, நவீன வசதிகள் கொண்ட நடமாடும் மருத்துவமனை எனப்படும் மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை முழுமையாக கட்டிக் கொடுக்கவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








