புதிய ரேவா எலக்ட்ரிக் காரில் ஒரு கிமீ.,க்கு 50 பைசா மட்டுமே செலவாகும்: பவன் கோயங்கோ
4 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வசதிகொண்ட என்எக்ஸ்ஆர் என்ற புதிய எலக்ட்ரிக் காரை மஹிந்திரா ரேவா விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. விலையை பொறுத்தே இந்த காரின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும் என்பதால் ஆட்டோமொபைல் துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், மாருதி ஸ்விப்ட், ஹூண்டாய் ஐ20 ஆகிய கார்களின் டீசல் மாடலைவிட 15 சதவீதம் முதல் 20 சதவீதம் விலை அதிகம் இருக்கும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. இதுகுறித்து மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் பவன் கோயங்கோ கூறியதாவது:
"சாதாரண ஹேட்ச்பேக் காரைவிட ரேவா என்எக்ஸ்ஆர் விலை அதிகம் இருக்கும். இதி்ல், மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.
பெட்ரோல் கார்களில் ஒரு கிமீ செல்ல 5 ரூபாய் முதல் 6ரூபாய் செலவாகும். டீசல் கார்களில் 3 ரூபாய் முதல் 4 ரூபாய் செலவாகும். ஆனால், 4 சீட்டர் ரேவாவில் ஒரு கிமீ செல்வதற்கு வெறும் 50 பைசா முதல் 60 பைசா செலவாகும்," என்றார்.
இதனிடையே, எலக்ட்ரிக் கார் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் தொலைநோக்கு திட்டத்துக்காக ரூ.23,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த திட்டம் இந்த மாதமோ அல்லது அடுத்த மாதமோ செயல்பாட்டுக்கு வர இருக்கிறது.
இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில் எலக்ட்ரிக் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வரை மானியம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, விலை அதிகம் நிர்ணயிக்கப்பட்டாலும், மானியத்தின் மூலம் எலக்ட்ரிக் கார் விலை ஒரு லட்ச ரூபாய் வரை குறைய வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









