மஹிந்திரா கார் ஆலையில் பயங்கர தீவிபத்து: உற்பத்தி பாதிப்பு

மஹாராஷ்டிர மாநிலம், நாசிக் நகரில் மஹி்நதிராவின் கார் ஆலை உள்ளது. இந்த ஆலையின் சரக்கு பராமரிப்பு பிரிவில் நேற்று திடீரென தீப்பிடித்தது. மளமளவென தீ அந்த பகுதி முழுவதும் வேகமாக பரவியது.
ஆனால், ஆலையில் இருந்த தீயணைப்பு சாதனங்கள் மற்றும் 25 தீயணைப்பு வண்டிகள் உதவியுடன் தீ விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆலையில் இருந்த பாதுகாப்பு வசதிகளால் அதிர்ஷ்டவசமாக பணியாளர்கள் யாரும் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடந்து வருவதாக மஹிந்திரா வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது. மேலும், தீவிபத்து காரணமாக நேற்று முதல் ஷிப்ட் கார் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிபத்தில் ஏற்பட்ட சேத மதிப்பு உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்பட வில்லை. இந்த ஆலையில்தான் ஸ்கார்ப்பியோ, பொலிரோ மற்றும் வெரிட்டோ கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








