மானேசர் ஆலையில் கார் உற்பத்தி விரைவில் சீரடையும்: மாருதி தகவல்

கடந்த ஜூலை மாதம் மாருதியின் மானேசர் ஆலையில் தொழிலாளர்களின் பயங்கர வன்முறை சம்பவத்தில் உயரதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இதையடுத்து, அந்த ஆலை கால வரையின்றி மூடப்பட்டதால் பெரும் உற்பத்தி இழப்பு ஏற்பட்டது. 500 தொழிலாளர்களும் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். பின்னர், ஒரு மாதம் கழித்து கடந்த ஆகஸ்ட்டில் ஆலை திறக்கப்பட்டது.
ஆனாலும், நாள் ஒன்றுக்கு 1,500 முதல் 1,700 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அந்த ஆலையில் மிகக் குறைந்த அளவிலேயே கார் உற்பத்தி செய்யப்பட்டது. படிப்படியாக தற்போது மானேசர் ஆலையில் புதிய பணியாளர்களை நியமித்து கார் உற்பத்தியை அதிகரித்து வருகிறது மாருதி. தற்போது நாள் ஒன்றுக்கு 800 முதல் 1,000 கார்கள் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த மாத மத்தியிலிருந்து மானேசர் ஆலையில் முழு அளவில் கார் உற்பத்தி செய்யப்படும் என மாருதி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மானேசர் ஆலையின் நிர்வாக அதிகாரி சித்திக் கூறுகையில்," தற்போது அனைத்து கார் மாடல்களின் உற்பத்தியும் துவங்கப்பட்டுவிட்டது. இந்த மாத மத்தியில் உற்பத்தி சீரடையும்," என்று தெரிவித்தார்.
மானேசர் ஆலையில் ஸ்விப்ட், டிசையர், ஏ-ஸ்டார், எஸ்எக்ஸ்-4 ஆகிய கார்களை மாருதி உற்பத்தி செய்து வருகிறது. மானேசர் ஆலையில் உற்பத்தி விரைவில் முழு அளவை எட்டும் என தெரிவிக்கப்பட்டதால் ஸ்விப்ட், டிசையர் கார்களின் டெலிவிரியும் விரைவில் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications