ஒர்க் அவுட் ஆன மோடி மந்திரம்: குஜராத்தில் பணிகளை துவங்கும் மாருதி

நாட்டின் மிகப் பெரிய கார் நிறுவனமான மாருதி ஹரியானாவில் ஆலைகளை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில், மானேசர் ஆலையில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் அந்த நிறுவனத்தை பெரும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
மேலும், மானேசர் தொழிற்பேட்டை பகுதியில் அரசியல் பின்புலத்துடன் செயல்படும் தொழிற்சங்கங்களால் பெரும் நெருக்கடிகளை அந்த நிறுவனம் சந்தித்து வருகிறது. இந்தநிலையில், குஜராத்தில் புதிய ஆலையை கட்டும் பணிகளை விரைந்து செயல்படுத்த அந்தநிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
ஜப்பானில் சமீபத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட குஜராத் முதல்வர் மோடி, சுஸுகி நிறுவனத்தின் தலைவர் ஒசாமு சுஸுகியை சந்தித்து பேசினார். அப்போது மானேசர் ஆலையில் நடந்த வன்முறை சம்பவம் குறி்த்தும் இருவரும் பேசியிருக்கின்றனர்.
மேலும், குஜராத்தில் அதிக முதலீடு செய்வதற்கு அனைத்து ஒத்துழைப்பும் தரப்படும் என்று முதல்வர் மோடி தெரிவித்துள்ளார். இதற்கு ஒசாமு சுஸுகியும் ஒப்புக்கொண்டு புதிய முதலீடுகளை செய்யத் தயார் என்று உறுதியளித்துவிட்டதாக அம்மாநில அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த மூன்று மாதங்களில் குஜராத்தில் புதிய ஆலை கட்டும் பணிகளை மாருதி துவங்க இருப்பதாக குஜராத் தொழிற்துறை முதன்மை செயலர் மகேஷ்வர் சாகூ தெரிவித்துள்ளார். முதல்வர் நரேந்திர மோடியுடன் சென்ற உயர்மட்டக் குழுவில் மகேஷ்வர் சாகூவும் இடம்பெற்றிருந்தார்.
குஜராத்தில் கட்டப்பட இருக்கும் புதிய ஆலைக்காக ரூ.4,000 கோடியை மாருதி முதலீடு செய்ய இருக்கிறது. 70 முதல் 160 ஹெக்டேர் பரப்பளவில் புதிய ஆலை அமைய இருக்கிறது. இதன்மூலம், 5,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








