500 தொழிலாளர்களை நீக்கியதற்கு மாருதியின் குர்கான் ஆலை தொழிற்சங்கம் எதிர்ப்பு

வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி 500 நிரந்தர தொழிலாளர்களை மாருதி இன்று பணிநீக்கம் செய்துள்ளது. இது மானேசர்-குர்கான் தொழிற்பேட்டையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மானேசர் ஆலை தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு மாருதியின் குர்கான் ஆலை தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், மாருதியின் முடிவை கண்டித்து குர்கான் ஆலையில் செயல்பட்டு வரும் மாருதி உத்யோக் தொழிற்சங்கம் சார்பில் இன்று பிற்பகல் கண்டன ஊர்வலம் நடக்கிறது. இதில், மாருதியின் குர்கான் ஆலை தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பல்வேறு ஆலைகளின் தொழிற்சங்கங்கள் கலந்து கொள்கின்றன.
இந்த கண்டன ஊர்வல போராட்டம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியிருக்கிறது. இதுகுறித்து குர்கான் ஆலை மாருதி தொழிற்சஙகத்தின் தலைவர் குல்தீப் ஜங்கு கூறுகையில்," மானேசர் ஆலை தொழிலாளர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இது சரியான முடிவு அல்ல.
தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும். கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் மானேசர்-குர்கான் தொழிலாளர் ஒருங்கிணைப்பு கமிட்டியின் மூலம் அடுத்த கட்ட குறித்து முடிவு எடுத்து அறிவிப்போம்.
மேலும், தற்காலிக தொழிலாளர்கள் அங்கு துன்புறத்தப்படுகின்றனர். அவர்களுக்கு குறைந்தபட்ச கூலி நிர்ணயம் செய்யவேண்டும்," என்று கூறினார்.
மானேசர் ஆலை மூடப்பட்டிருந்த நிலையில், குர்கான் ஆலையை வைத்துத்தான் மாருதி ஓரளவு உற்பத்தியை சரிகட்டி வருகிறது. இந்த நிலையில், குர்கான் ஆலை தொழிலாளர்களும் மாருதிக்கு எதிராக போர்க்கோடி தூக்கியுள்ளது அந்த நிறுவனத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications