மத்திய பட்ஜெட்டுக்கு பின் எர்டிகாவை அறிமுகம் செய்ய மாருதி முடிவு

7 பேர் பயணம் செய்யும் வசதி கொண்ட தனது முதல் எம்பிவை காரை கடந்த ஜனவரியில் நடந்த ஆட்டோ கண்காட்சியில் மாருதி பார்வைக்கு வைத்திருந்தது. எம்பிவி ரகத்தில் குறைந்த விலையில் வரும் எம்பிவி கார் என்று தகவல்கள் வெளியானதால் வாடிக்கையாளர் மத்தியில் எர்டிகாவுக்கு ஏக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனைக்கு வர உள்ள இந்த புதிய எம்பிவி டொயோட்டோ இன்னோவாவுக்கு பெரும் தலைவலியை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில், வரும் 16ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதற்கு கார் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பெட்ரோல் விலை கணிசமாக உயர்ந்துவிட்டதால், டீசல் கார்கள் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் கார்களைவிட டீசல் கார்களின் விலை தற்போது ரூ.80,000 வரை அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில், டீசல் கார்கள் மீது பட்ஜெட்டில் கூடுதல் வரி விதிக்கப்பட்டால், அது டீசல் கார் விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில், எர்டிகாவை மத்திய பட்ஜெட்டுக்கு முன்னரே விற்பனைக்கு கொண்டு வருவதை மாருதி விரும்பவில்லை.
ஏனெனில், பட்ஜெட்டில் டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டால் எர்டிகாவின் டீசல் மாடல் விலையை உடனடியாக உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இது வாடிக்கையாளர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் என்று கருதி மாருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








