மாருதி கார் ஆலை விரைவில் திறக்கப்படும்: ஹரியானா முதல்வர் நம்பிக்கை

தொழிலாளர்களின் வன்முறையால் மானேசரிலுள்ள மாருதி கார் ஆலை கடந்த 3 வாரங்களாக மூடப்பட்டிருக்கிறது. கார் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இந்த ஆலையை நம்பியிருக்கும் தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் சப்ளையர்களின் ஆலைகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வன்முறை குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்தால்தான் மீண்டும் ஆலையை திறப்போம் என மாருதி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதனால், மானேசர் ஆலை விரைவில் திறக்கப்படுவதற்கான அறிகுறி இல்லை. இதனால், ஹரியானா அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாருதி ஆலையில் விரைவில் கார் உற்பத்தி துவங்கும் என ஹரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
"மாநிலத்தில் தொழிலாளர் பிரச்னை மிகக் குறைவு. ஆனால், மானேசர் ஆலையில் நிகழ்ந்த வன்முறை குறித்து கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளோம். எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் நிகழா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாருதி நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். ஆலையின் பாதுகாப்புக்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். இதில், மாருதி நிர்வாகத்துக்கு திருப்தி ஏற்பட்டுள்ளதாக கருதுகிறேன்.
எனவே, மானேசர் ஆலையில் விரைவில் கார் உற்பத்தி துவங்கும். மேலும், ஹரியானாவிலிருந்து குஜராத்துக்கு செல்ல மாருதி முடிவு எடுத்து இருப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானது," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications