மானேசர் ஆலையை 99 % ரோபோட்டிக்காக மாற்றும் மாருதி!

நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பாளராக திகழும் மாருதி நிறுவனம் தொழிலாளர் பிரச்னையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு முதல் அவ்வப்போது நடைபெற்று வரும் தொழிலாளர் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களால் கார் உற்பத்தி பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.
இந்த பிரச்னைக்கு நிரந்தர முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் மாருதி இருக்கிறது. இதற்காக, மானேசரின் முதல் உற்பத்தி பிரிவு முழுவதும் ரோபோட்டிக் ஆலையாக மாற்ற மாருதி முடிவு செய்திருக்கிறது. மாருதியின் இந்த பழைய ஆலையில் 1,500 ரோபோட் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த ஆலை 90 சதவீதம் அளவுக்கு தானியங்கி முறையில் கார் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
இருந்தாலும், தொழிலாளர் எண்ணிக்கையை முற்றிலுமாக குறைத்து 99 சதவீதம் அளவுக்கு ரோபோட்டிக் ஆலையாக மாற்ற மாருதி திட்டமிட்டுள்ளது. இதற்காக, புதிதாக 100 ரோபோட் எந்திரங்களை இந்த ஆலைக்கு கொண்டு வருகிறது மாருதி.
மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகியின் ஜப்பானிலுள்ள ஹமமட்சூ ஆலை இதேபோன்று முழுக்க முழுக்க தானியங்கி முறையில் கார் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட உயர் தொழில்நுட்ப வசதி கொண்டது. இந்த ஆலை ஒரு சதவீதம் மட்டுமே மனித ஆற்றல் கொண்டது.
இதேபாணியில் மானேசரிலுள்ள பழைய ஆலையையும் 99 சதவீதம் அளவுக்கு ரோபோட்டிக் ஆலையாக மாற்ற மாருதி முடிவு செய்துள்ளது. சில நூறு பணியாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு இந்த ஆலை கார் உற்பத்தியை தொடர முடியும்.
தவிர, மனித ஆற்றலை விட ரோபோட்டிக் முறையில் கார் தயாரிக்கும்போது தயாரிப்பு குறைகள் எழ வாய்ப்பு குறையும் என்பதால் தரமான தயாரிப்புகளை வாடிக்கையாளர்களை வழங்க முடியும் என மாருதி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








