வரும் 21ந் தேதி மானேசர் ஆலையில் உற்பத்தி துவங்கும்: மாருதி அறிவிப்பு

தொழிலாளர்கள் நிகழ்த்திய வன்முறை சம்பவங்களால், கடந்த ஒரு மாதமாக மாருதியின் மானேசர் ஆலை மூடப்பட்டுள்ளது. இதனால், ஸ்விப்ட், டிசையர் கார் உற்பத்தி அடியோடு முடங்கியுள்ளது.
இந்த நிலையில், பணியாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதையடுத்து, ஆலையை உடனடியாக திறக்க மாருதி முன்வரவில்லை. இதனால், மாருதிக்கு மட்டுமின்றி, தொழிலாளர்கள்,சப்ளையர்கள், டீலர்கள், வாடிக்கையாளர்கள் என அனைத்து தரப்புக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், பண்டிகை கால விற்பனையிலும் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது. இதை தவிர்த்து ஓரளவு விற்பனையை தக்க வைக்கும் விதமாக வரும் 21ந் தேதி முதல் மானேசர் ஆலையில் மீண்டும் கார் உற்பத்தியை துவங்க மாருதி முடிவு செய்துள்ளது. இதனை மாருதியின் தலைவர் பர்கவா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முதலில் குறைந்தபட்சமாக நாள் ஒன்றுக்கு 150 கார்களை மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளது. படிப்படியாக கார் உற்பத்தி அதிகரிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், வன்முறையில் ஈடுபட்டதாக கருதப்படும் தொழிலாளர்களை மாருதி வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இதற்காக, 500 நிரந்தர தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால், எந்த நேரத்திலும் மீண்டும் போராட்டம் வெடிக்கும் அபாயம் இருப்பதால், நிறுவனத்தின் 100 பாதுகாவலர்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய 500 போலீசார் பாதுகாப்போடு ஆலையில் உற்பத்தி துவங்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications