குஜராத்தை உற்பத்தி கேந்திரமாக மாற்றிக்கொள்ள மாருதி முடிவு

கார் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாருதி நிறுவனம் டெல்லி அருகேயுள்ள குர்கான் மற்றும் மானேசரில் ஆலைகளை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில், எதிர்கால சந்தை தேவையை கருத்தில்கொண்டு புதிய கார் ஆலையை குஜராத்தில் அமைக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், குர்கானில் உள்ள தனது பழம் பெருமை வாய்ந்த ஆலையில் கார் உற்பத்தியை கணிசமாக குறைக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்த ஆலையை விரிவாக்கம் செய்து டீசல் எஞ்சின் உற்பத்தி பிரிவை துவங்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதுதவிர, குர்கான் ஆலை அமைந்துள்ள பகுதிக்கு குடியிருப்புகள் பெருகி விட்டதால், உதிரிபாகங்கள் மற்றும் உற்பத்தி செய்த கார்களை எடுத்து செல்லும் கன்டெய்னர்கள் சென்று வருவதில் பெரும் பிரச்னை இருப்பதாலும் குர்கானில் கார் உற்பத்தியை குறைக்க மாருதி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே, குஜராத்தில் முடிந்தவரை சீக்கிரமாகவே புதிய ஆலை கட்டும் முனைப்பில் உள்ளது மாருதி. தனது பெரும்பான்மையான கார்களை குஜராத்தில் அமைய இருக்கும் புதிய ஆலையிலேய உற்பத்தி செய்யவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
குஜராத் ஆலையில் தயாரிக்கப்படும் கார்கள் உள்நாட்டு தேவைகளையும், ஏற்றுமதியையும் சமாளிக்கும் வகையில் அதிக முதலீட்டில் கட்டுவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








