மாருதியின் புதிய 800 கார் சோதனை ஓட்டம் ஆரம்பம்: அறிமுகம் எப்போது?

மார்க்கெட் போட்டியை சமாளிக்கும் வகையில், புதிய 800சிசி காரை மாருதி வடிவமைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றான ஆல்ட்டோ பிளாட்பார்மிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய கார் வடிவமைப்பில் மாறுபட்டதாக இருக்கும்.
புதிய காரில் பொருத்தப்பட்டிருக்கும் 800சிசி எஞ்சின் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்க வல்லதாக இருக்கும் அதே சமயத்தில் அதிக பிக்கப்பையும் தரும். தவிர, அதிக வசதிகளையும் கொண்டிருக்கும் என்பதோடு ரூ.2.5 லட்சம் என்ற கடும் சவாலான விலையில் விற்பனைக்கு வர இருப்பதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆல்ட்டோ 800 என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய காரின் சாலை சோதனை ஓட்டத்தை மாருதி துவங்கியுள்ளது. எனவே, விரைவில் மார்க்கெட்டுக்கு வந்துவிடும் என்று தெரிகிறது. இதுகுறித்து நாட்டின் பிரபல ஆட்டோமொபைல் நாளிதழ் ஆட்டோகார் இந்தியா இதழின் ஆசிரியர் குறிப்பிடுகையில், ஒரு கார் சோதனை ஓட்டம் துவங்கிவிட்டால், அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துவிடும் என்று கூறியுள்ளார்.
எனவே, வரும் பண்டிகை காலத்தில் புதிய மாருதி ஆல்ட்டோ 800 கார் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. ஹூண்டாய் இயானுக்கு போட்டியை கொடுக்கும் அம்சங்கள் இதில் இருக்கும். அடுத்த 3 மாதங்களில் புதிய ஆல்ட்டோ 800 வருவது உறுதியாகியுள்ளதால் ஆட்டோமொபைல் துறையினர் மத்தியிலும், வாடிக்கையாளர் மத்தியிலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.


Click it and Unblock the Notifications