லட்சத்தையும் தாண்டிய ஸ்விப்ட் புக்கிங்: என்ன செய்யப்போகிறது மாருதி?

கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் நெஞ்சில் நீக்கமற நிறைந்து விட்ட ஸ்விப்ட் பல சோதனை கட்டங்களை தாண்டி வெற்றி நடை போட்டு வருகிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை அந்த காருக்கான புக்கிங் தொடர்ந்து எதிர்பாராத எண்ணிக்கையிலேயே இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு ஸ்விப்ட் உற்பத்தி செய்யப்படும் மானேசர் ஆலையில் தொழிலாளர் போராட்டங்களால் அந்த காருக்கான புக்கிங் எண்ணிக்கை கிடுகிடுவென 1.08 லட்சமாக உயர்ந்தது. மாருதி எடுத்த தீவிர நடவடிக்கைகள் காரணமாக ஸ்விப்ட்டுக்கான காத்திருப்பு காலம் வெகுவாக குறைத்து வந்தது.
இந்த நிலையில், கடந்த ஜூலையில் மானேசர் ஆலை தொழிலாளர்கள் நடத்திய வன்முறை சம்பவத்தால் அந்த ஆலை மூடப்பட்டது. இதனால், ஸ்விப்ட் டெலிவிரி முற்றிலும் முடங்கியது. ஒரு மாத கதவடைப்புக்கு பின் கடந்த மாதம் 21ந்தேதி மானேசர் ஆலையில் உற்பத்தி துவங்கப்பட்டது. ஆனால், 500 தொழிலாளர்கள் கூண்டோடு டிஸ்மிஸ் செய்யப்பட்டதால் அங்கு முழு அளவிலான உற்பத்தி நடைபெறவில்லை.
இதனால், ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களுக்கான புக்கிங் எண்ணிக்கை மலைபோல் குவிந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஸ்விப்ட் காருக்கான புக்கிங் எண்ணிக்கை 1.25 லட்சமாகவும், டிசையர் காருக்கான புக்கிங் 65,000 என்ற எண்ணிக்கையையும் தாண்டி விட்டதாக அந்த நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மானேசர் ஆலையில் புதிய தொழிலாளர்களை நியமித்து மாருதி பயிற்சி கொடுத்து வருகிறது. எனவே, இந்த மாதத்திற்குள் மானேசர் ஆலையில் உற்பத்தி இயல்பு நிலைக்கு திரும்பும் என தெரிகிறது. இருந்தாலும், ஸ்விப்ட் டீசல் காருக்கான டெலிவிரி சீரடைந்து புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க எப்படியும் 8 மாதங்கள் அல்லது அதற்கும் மேலும் ஆகலாம் என அந்த நிறுவனத்தின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிசையர் கார் தற்போது குர்கான் ஆலையிலும் உற்பத்தி செய்யப்பட்டு வருவதால் இந்த காருக்கான காத்திருப்பு காலம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து ஸ்விப்ட் காரையும் குர்கான் ஆலையில் உற்பத்தி செய்ய மாருதி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதேவேளை, இந்த இரு கார்களுக்கும் தொடர்ந்து மாருதி புக்கிங் பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications