வரும் ஆகஸ்ட்டில் 7 பேர் செல்லும் வசதிகொண்ட நிசான் இவாலியா

ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனம் மைக்ரா, சன்னி மூலம் மிதமான வளர்ச்சியை பெற்று வருகிறது. மேலும், விற்பனை வளர்ச்சியை அதிகரிக்கும் விதமாக புதிய மாடல்களை அறிமுகம் செய்யும் முனைப்பில் அந்த நிறுவனம் உள்ளது.
இந்த நிலையில், கடந்த மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவி்ல அறிமுகம் செய்யப்பட்ட இவாலியா எம்பிவியை வரும் ஆகஸ்ட்டில் களமிறக்க நிசான் திட்டமிட்டுள்ளது.
நிசான் நிறுவனத்தின் இவாலியா பல்வேறு நாட்டு சந்தைகளில் வெற்றிகரமான மாடலாகவும், நிசானின் விற்பனை வளர்ச்சிக்கு ஊன்றுகோலாகவும் இருந்து வருகிறது. எனவே, இந்திய மார்க்கெட்டிலும் இவாலியா வெற்றிகரமான மாடலாக உருவெடுக்கும் என்று நிசான் நம்புகிறது.
நம் நாட்டு எம்பிவி ரகத்தில் அதிக இடவசதி கொண்ட காராக டொயோட்டோ இன்னோவா திகழ்கிறது. இந்த நிலையில், நிசான் இவாலியா இன்னோவாவுக்கு போட்டியாக அதிக இடவசதி கொண்ட கார் என்ற பெருமையை பெறும் என்று தெரிகிறது.
7 பேர் தாராளமாக அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இவாலியாவுக்கு இன்னோவாவைவிட கூடுதல் சிறப்பாக கூற வேண்டுமானால், இது மாருதி ஆம்னி போன்று பக்கவாட்டில் தள்ளி திறக்கும் ஸ்லைடிங் கதவுகளை கொண்டிருப்பதால் ஏறி இறங்குவதற்கு வசதியாக இருக்கும்.
மேலும், இது யுட்டிலிட்டி வாகனமாகவும் பயன்படுத்த முடியும் என்பதால் பொருட்களை ஏற்றி இறக்குவதற்கு வசதியாக இருக்கும். புதிய இவாலியாவில் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் நிசானின் பார்ட்னர் ரினால்ட் நிறுவனம் வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.
இவாலியாவின் டீசல் எஞ்சின் இரண்டுவிதமான பவர் அவுட்புட் வேரியண்ட்களில் கிடைக்கும். ஒன்று 85 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சினையும், மற்றொன்று 105 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சின் வேரியண்ட்களிலும் கிடைக்கும்.
சென்னை அருகே ஒரகடத்தில் உள்ள நிசான்-ரினால்ட் ஆலையில்தான் இவாலியா உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த எம்பிவி ரூ.7 லட்சம் முதல் ரூ.9 லட்சம் விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








