பார்க்கிங் இடமிருந்தால் மட்டுமே காருக்கு பதிவு: டெல்லி அரசு பரிசீலனை

நாட்டின் தலைநகர் டெல்லியில் கார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரே வீட்டிலேயே இரண்டு மூன்று கார் வைத்திருப்பவர்கள் தெருவிலேயே காரை நிறுத்தி விடுவதால் பல சமயங்களில் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
மேலும், மாநகரத்தில் பெரும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க பல வகைகளிலும் யோசித்து வருகிறது டெல்லி அரசு. பார்க்கிங் கட்டணத்தை மும்மடங்கு உயர்த்த முடிவு செய்தது. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில், பெருகி வரும் கார் உள்ளிட்ட தனி நபர் வாகனங்களை கட்டுப்படுத்த புதிய திட்டத்தை கையிலெடுத்துள்ளது டெல்லி அரசு. அதாவது, பார்க்கிங் செய்ய வீட்டிலோ அல்லது அலுவலகம், கடைகளில் பார்க்கிங் செய்வதற்கு போதிய இடம் இருப்பதை அத்தாட்சியுடன் காட்டினால் மட்டுமே வாகனத்தை பதிவு செய்ய முடியும். இதன்மூலம், ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்கள் வாங்குவதை முடிந்தவரை தடுக்க முடியும் என்று டெல்லி அரசு கணக்கிடுகிறது.
ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்தான் சமீபத்தில் இந்த யோசனையை அம்மாநில அரசுக்கு தெரிவித்தது. இதனை தற்போது டெல்லி அரசும் கையிலெடுக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற ஆணையின் நகலை தருமாறு டெல்லி அரசிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும், டெல்லி அரசின் தலைமை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் கமிட்டி இந்த புதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாதக பாதகங்களை ஆராய்ந்து வருகிறது. மேலும், இந்த திட்டத்தை டெல்லியில் மட்டுமே செயல்படுத்தினால் போதிய பலன் தராது.
எனவே, டெல்லியை உள்ளடக்கிய வடமத்திய மண்டலம்(என்சிஆர்) முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டிய நிலை இருக்கிறது. எனவே, தற்போது விரிவான ஆய்வுகளை நடத்தி வருகிறது டெல்லி அரசு. இந்த திட்டம் நம் நாட்டுக்கு புதிது என்றாலும், ஜப்பான் உள்ளிட்ட பல வெளிநாடுகளில் இந்த சட்டம் அமலில் உள்ளது.


Click it and Unblock the Notifications








