சென்னை-பெங்களூர் இடையே டாய்லெட் வசதியுடன் வால்வோ பஸ் சேவை துவக்கம்
சென்னை பெங்களூர் இடையே கழிவறை வசதியுடன் கூடிய வால்வோ பஸ்களின் சேவையை கர்நாடக போக்குவரத்து கழகம் நேற்று துவங்கியது.
நீண்ட தூரம் செல்லும் பஸ்களில் பயணிகளின் வசதிக்காக பல புதிய ஏற்பாடுகளை கர்நாடக போக்குவரத்து கழகம் செய்து வருகிறது. இதன்படி, 6 வால்வோ மல்டி ஆக்சில் பஸ்களில் கேன்டீன் மற்றும் கழிவறை வசதிகளை செய்துள்ளது.

இந்த பஸ்களின் சேவையை நேற்று கேஎஸ்ஆர்டிசி துவங்கியது. மும்பை மற்றும் புனே உள்ளிட்ட 10 மணி நேரத்திற்கும் அதிகமாக செல்லும் பஸ்களில் கேன்டீன் மற்றும் கழிவறை வசதிகள் இருக்கும். அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த பஸ்களுக்கு ஐராவதா சுப்பீரியா என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
சென்னை மற்றும் திருப்பதி செல்லும் பஸ்களில் கழிவறை வசதி மட்டும் இருக்கும். இந்த பஸ்களுக்கு ஐராவதா பிலிஸ் என்று பெயரிட்டப்பட்டிருக்கிறது. இந்த பஸ்களில் இருக்கைக்கு பின்புறம் டிவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும், லேப்டாப், டேப்லெட் கம்ப்யூட்டர்களுக்கு இன்டர்நெட் வசதி பெறும் வகையில் வைஃபை இன்டர்நெட் இணைப்பு வசதியும் இருக்கும்.
இந்த பஸ்கள் செயற்கைகோள் உதவியுடன் இயங்கும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலமும் கண்காணிக்க முடியும். ஐராவதா கிளப் கிளாஸ் பஸ்களைவிட இந்த பஸ்களில் ரூ.50 மட்டுமே கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
பஸ்சில் உள்ள மைக்ரோ ஓவனில் பயணிகள் எடுத்துச் செல்லும் உணவுப் பொருட்களை சூடாக்கிக் கொள்ள அனுமதி உண்டு. இல்லையெனில் ஆர்டர் செய்தும் வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஸ்களில் இருக்கும் கேன்டீனுக்கு வரவேற்பு அதிகரிக்கும் பட்சத்தில் தனியாரிடமிருந்து உணவுப் பொருட்களை சப்ளை பெறவும் திட்டம் உள்ளதாக கேஎஸ்ஆர்டிசி தெரிவித்துள்ளது. இதன்மூலம், பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த சேவை கிடைக்கும் என கேஎஸ்ஆர்டிசி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் சில தனியார் நிறுவனங்கள் பஸ்களை இயக்கி வருகின்றன. இந்த நிலையில், முன்பு ஜேஜேடிசி என்ற பெயரில் தமிழக விரைவு போக்குவரத்து கழகத்தில் கழிவறை வசதியுடன் பஸ்கள் இயக்கப்பட்டன.
ஆனால், கேன்டீன், கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








