அடுத்த ஆண்டு டெர்ரா ஹோம் கேரவன்களை அறிமுகப்படுத்தும் பிசிபி

சகல வசதிகளுடன் கூடிய சொகுசு கேரவன்கள் பெரும்பாலும் சினிமா துறையில் பயன்படுத்தப்படுகின்றன. விலை அதிகம் என்பதால் இந்த கேரவன்கள் அதிக வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில், சினிமாத் துறையினர் மட்டுமின்றி பாதுகாப்பு துறையினர், கட்டுமானத் துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும் ஏற்ற வகையில் புதிய கேரவன்களை அறிமுகப்படுத்த இருப்பதாக இந்தியாவி்ன் பிரபலமான ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனமான பிசிபி அறிவித்துள்ளது.
ஓய்வுக்காக மட்டுமின்றி அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்ற அனைத்து வசதிகளுடன் புதிய கேரவன்களை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு வர்த்தக ரீதியில் இந்த கேரவன்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக பிசிபி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக, தாய்லாந்தை சேர்ந்த சியான் என்ற கேரவன் தயாரிப்பு நிறுவனத்துடன் பிசிபி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. தாய்லாந்திலிருந்து பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, புனேயிலுள்ள பிசிபி ஆலையில் கேரவன்கள் அசெம்பிளிங் செய்யப்பட இருக்கிறது.
லைவ் டிவி, படுக்கை வசதி, அலுவலக பயன்பாடுகளுக்கு ஏற்ற அனைத்து வசதிகளுடன் இந்த கேரவன்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.
மஹிந்திரா ஜீனியோ பிக்கப் டிரக்கை ஒத்த வாகனத்தில் கேரவன்கள் அசெம்பிளிக் செய்யப்பட இருப்பதாகவும், இதில் 7 முதல் 8 பேர் தங்கவும், பயணம் செய்யவும் முடியும் என்றும் பிசிபி தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர் விரும்பும் வசதிகளுக்கு தக்கவாறு ரூ.31 லட்சம் முதல் ரூ.37 லட்சம் விலையில் புதிய கேரவன்கள் விற்பனை செய்ய பிசிபி திட்டமிட்டுள்ளது. ஆர்டர் கொடுத்து 10 முதல் 12 வாரங்களில் கேரவன்கள் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவிக்க்ப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








