பெட்ரோல் விலை: பைக் மார்க்கெட்டில் அடிக்கப் போகும் அதிர்ஷ்ட காற்று!

சமீபத்திய பெட்ரோல் விலை உயர்வு கார் விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. மேலும், டீசல் விலையை அதிகரிக்கவும், டீசல் கார்கள் மீது ரூ.80,000 வரை கூடுதல் வரி விதிக்கவும் மத்திய அரசு தி்ட்டமிட்டுள்ளதால், வாடிக்கையாளர்களின் கார் கனவு மெல்ல கலைந்து வருகிறது.
மேலும், காரில் செல்லும்போது பெட்ரோல், டீசலுக்கு பெரும் தொகை செலவிட வேண்டியிருக்கிறது. தற்போது எகிறி வரும் எரிபொருள் விலை பட்ஜெட்டை தாண்டுவதால், கார் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் தற்போது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் பக்கம் கவனத்தை திசை திருப்பியுள்ளனர்.
இதனால், அடுத்து வரும் மாதங்களில் மோட்டார்சைக்கிள் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
"பண வீக்கம் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் தங்களது மாத செலவை குறைத்துக் கொள்ள முயன்று வருகின்றனர். மேலும், எரிபொருள் செலவை குறைக்க, அவர்கள் சிக்கனமான போக்குவரத்தை விரும்புகின்றனர்.
எனவே, அடுத்து வரும் மாதங்களில் இருசக்கர வாகன விற்பனை கணிசமாக அதிகரிக்கும்," என ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








