நஷ்டத்தை தவிர்க்க 8,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் பீஜோ

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீஜோ-சிட்ரோவன் நிறுவனம் ஐரோப்பிய கார் மார்க்கெட்டில் பெரிய நிறுவனமாக திகழ்கிறது. ஆனால், போட்டியாளர்களை சமாளிக்க முடியாமல் அந்த நிறுவனத்தின் கார் விற்பனை கடுமையாக சரிந்து விட்டது.
இதனால், அந்த நிறுவனத்தின் வருவாய் வெகுவாக பாதிக்கப்பட்டு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. நடப்பாண்டின் முதல் பாதியில் மட்டும் 4250 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வருவாய் வீழ்ச்சி கண்டு வருவதால் 8,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்குவதாக பீஜோ அறிவித்துள்ளது.
மேலும், பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே ஆல்னே என்ற இடத்தில் உள்ள கார் அசெம்பிளிங் ஆலையையும் மூட திட்டமிட்டுள்ளது. வரும் 2014ம் ஆண்டில் இந்த ஆலையை முற்றிலுமாக இழுத்து மூட உள்ளது. இந்த தொழிற்சாலையில் வேலைபார்க்கும் 3,000 தொழிலாளர்கள் வேலையை இழக்க உள்ளனர்.
இதேபோன்று, மேற்கு பிரான்ஸில் உள்ள ரென்னீஸ் ஆலையையும் மூட முடிவு செய்துள்ளது.இந்த ஆலையில் பணிபுரியும் 1,400 பேர் வேலையை இழக்கின்றனர். இதுதவிர, பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை அந்த நிறுவனம் வீட்டுக்கு அனுப்புகிறது.
இதுகுறித்து பீஜோ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பிலிப் வரின் கூறுகையில்,"இன்றைய அறிவிப்பின் மூலம் ஏற்படும் பாதிப்பின் தீவிரத்தை உணர்கிறேன். இருப்பினும், ஐரோப்பாவில் எங்களது வர்த்தகம் பெரும் பாதிப்படைந்துள்ளது. எனவே பணியாளர்களை நீக்கும் முடிவை தவிர வேறு வழி தெரியவில்லை,"என்று கூறினார்.
இதனிடையே நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் பீஜோ நிறுவனத்தின் 7 சதவீத பங்குகளை ஜெனரல் மோட்டார்ஸ் கடந்த மார்ச்சில் வாங்கியது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் 4,000 கோடி முதலீட்டில் புதிய ஆலை கட்டப் போவதாக பீஜோ அறிவித்தது. மேலும், குஜராத்தில் புதிய ஆலை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டியது. ஆனால், நிதி நெருக்கடி காரணமாக இந்த ஆலை திட்டத்தை கைவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








