குஜராத்தில் ஆலை கட்டும் திட்டத்தை கைவிட்ட பீஜோ: அரசிடமே நிலத்தை திரும்ப ஒப்படைத்தது

பிரெஞ்ச் கார் நிறுவனமான பீஜோ இந்திய கார் மார்க்கெட்டில் மீண்டும் காலடி எடுத்து வைக்க திட்டமிட்டதுடன் குஜராத்தில் ஆலை அமைக்க முடிவு செய்தது. இதற்காக, ரூ.4,000 கோடி முதலீட்டை செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்தது.
டாடா நானோ கார் தொழிற்சாலை அமைந்திருக்கும் சனந்த் தொழிற்பேட்டை பகுதியில் பீஜோவுக்காக 600 ஏக்கர் நிலத்தை அம்மாநில அரசு ஒதுக்கி தந்தது. அந்த இடத்தில் புதிய ஆலை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்குவதற்கு தயாராக இருந்தது. வரும் 2015ம் ஆண்டு முதல் இந்த புதிய ஆலையில் கார் உற்பத்தி துவங்குவதற்கு திட்டமிட்டிருந்தது.
இந்த நிலையில், பீஜோ நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால், புதிய முதலீடு திட்டங்களை கைவிட அந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. ஐரோப்பிய வர்த்தகத்தை மீட்பதற்காக அனைத்து வருவாயையும் ஒருமுகப்படுத்தி அங்கேயே முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
இதனால், இந்திய வர்த்தக பணிகளை அந்த நிறுவனம் கைவிட்டுள்ளது. மேலும், குஜராத் அரசு ஒதுக்கித் தந்த 600 ஏக்கர் நிலத்தையும் அம்மாநில அரசிடமே திரும்ப ஒப்படைத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 3 ஆண்டுகளுக்கு புதிய முதலீட்டு திட்டங்களை அந்த நிறுவனம் ஒதுக்கி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








