ஸ்டெச்சரில் படுத்துக்கொண்டு போய் நானோ காரை அறிமுகம் செய்தேன்: ரத்தன் டாடா நெகிழ்ச்சி

பிரபல என்டிடிவி செய்தி சேனலுக்கு டாடா மோட்டார்ஸ் தலைவர் ரத்தன் டாடா பேட்டி கொடுத்துள்ளார். அதில், நானோ கார் முதன்முறையாக சர்வதேச அளவில் அறிமுகம் செய்த தருணங்களை அவர் நினைவு கூர்ந்தார்.
அப்போது, ஸ்டெச்சரில் படுத்துக்கொண்டு போய் ஜெனிவா மோட்டார் ஷோவில் முதன்முறையாக நானோ காரை அறிமுகம் செய்ததாக அவ்ர நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இதுகுறித்து பேட்டியின்போது அவர் கூறியதாவது:
"கடந்த 2008ம் ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில் நானோ காரை அறிமுகம் செய்தேன். அப்போது எனக்கு முதுகு வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன்.
இருந்தாலும், அந்த வலியையும் பொருட்படுத்தாமல், ஒரு டாக்டரை துணைக்கு வைத்துக்கொண்டு ஸ்டெச்சரில் படுத்துக்கொண்டு மும்பையிலிருந்து ஜெனிவா சென்றேன். அந்த டாக்டர் வழங்கிய வலி நிவாரண மாத்திரைகளை உட்கொண்டு சற்று நிவாரணம் கிடைத்தது. அதன் பின்புதான் நானோ காரை அறிமுகம் செய்தேன்.
அப்போது ஜப்பானியர்களும், கொரியர்களும் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த நானோ காரின் தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வமாக அங்கு சுற்றி வந்து கொண்டிருந்தனர்.
ஜெர்மானிய கார் நிறுவனங்களும், வெளிநாட்டு ஆட்டோமொபைல் எஞ்சினியர்களும் நானோ காரை திறந்து பார்த்து இந்த விலையில் இது சாத்தியமானது எப்படி ஆராய்ந்து கொண்டிருந்தனர்," என்று பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், நானோ கார் எனது கனவு மட்டுமல்ல, அதை எனது குழுந்தையாகவே கருதுகிறேன் என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். நானோ கார் தனது கனவு என்று அடிக்கடி குறிப்பிட்டு வரும் ரத்தன் டாடா அந்த கார் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளார். தவிர, நானோ காரின் டீசல் மற்றும் எலக்ட்ரிக் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் சமீபத்தில் அவர் கூறியது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








