நானோவுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது: ரத்தன் டாடா
"இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் நானோ காருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது," என்று ரத்தன் டாடா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடாவின் கனவு காராக உருவான நானோ அறிமுகமாகும்போது பெரும் எதிர்பார்ப்புடன் வந்தது. ஆனால், ஒரு சில மாதங்களில் நானோ காருக்கான வரவேற்பு அடியோடு சரிந்தது.

இந்த நிலையில், நானோ காரை பல்வேறு முயற்சிகளுக்கு பின் தற்போது மார்க்கெட்டில் மீண்டும் வலம் வரச் செய்துள்ளது டாடா மோட்டார்ஸ். இந்த நிலையில், சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆண்டறிக்கையை வெளியிட்ட அந்த நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா நானோ கார் மீது மிகுந்த நம்பிக்கை தெரிவித்தார்.
அவர் கூறுகையில்," இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் நானோ காருக்கு அதிக வர்த்தக வாய்ப்பு இருக்கிறது. ஸ்கூட்டரில் செல்லும் குடும்பங்களின் கார் ஆசையையும், பாதுகாப்பையும் நிச்சயம் நானோ கார் பூர்த்தி செய்யும்.
ஆரம்பத்தில் சில சறுக்கல்களை நானோ சந்தித்தது உண்மை. ஆனால், அதற்கான காரணங்களை கண்டறிந்து தற்போது சரி செய்து விட்டோம். மேலும், சிறந்த டீலர் நெட்வொர்க் மற்றும் சர்வீஸ் வசதிகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.
இதன் மூலம் நானோ காரின் விற்பனை அதிகரிக்க முடியும். நானோ காருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது,"என்றார்.


Click it and Unblock the Notifications