ரூ.4 லட்சத்திற்குள் புதிய ஹேட்ச்பேக் கார்: ரினால்ட் அறிவிப்பு

நிசான் மைக்ரா காரின் நகலான பல்ஸ் காரை களமிறக்கி ரினால்ட் நிறுவனம் ஏமாற்றம் தந்தது. இருந்தாலும்,அடுத்தடுத்து கார்களை அறிமுகப்படுத்துவதாக அந்த நிறுவனம் ஏற்கனவே கூறியதால், அதில் புதிய ஹேட்ச்பேக் கார் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரினால்ட் நிறுவனம். ரூ.4 லட்சத்திற்குள் புதிய ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ரினால்ட் நிறுவனம் தெரிவி்த்துள்ளது.
இதுகுறித்து ரினால்ட் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு துணைத் தலைவர் லென் கூரன் கூறியதாவது:
"சிறிய கார் சந்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். ரூ.4 லட்சத்திற்குள் விலை கொண்ட புதிய ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்தும் திட்டமும் இருக்கிறது.
ஆனால், சிறிய கார் மார்க்கெட்டை பிடிக்க போதுமான டீலர் நெட்வொர்க் இருக்க வேண்டும். ஆனால், எங்களிடம் தற்போது போதுமான டீலர் நெட்வொர்க்கை பெற்றிருக்கவில்லை.
எனவே, டீலர் நெட்வொர்க்கை விரிவுப்படுத்திய பிறகு இந்த புதிய காரை அறிமுகம் செய்வோம். மேலும், மத்திய அரசு டீசல் கார்கள் மீது கூடுதல் வரியை சுமத்தினால், அதை சமாளிக்கும் திட்டமும் கைவசம் உள்ளது.
பெட்ரோல் கார் மாடல்களை அறிமுகப்படுத்துவதற்கு அப்போது முக்கியத்துவம் கொடுப்போம். மேலும், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் எங்களது ஆலைகளுக்கு கார் உதிரிபாகங்களை வாங்கி ஏற்றுமதி செய்கிறோம்.
மேலும், எங்களது பெரும்பாலான கார் மாடல்களுக்கு உள்நாட்டு உதிரிபாகங்களை கொண்டு தயாரிக்க உள்ளோம். இதனால், வாடிக்கையாளர்களுக்கு சரியான விலையில் கார்களை விற்பனை செய்ய முடியும்," என்றார்.


Click it and Unblock the Notifications








