சுஸுகி தலைவர் இன்று இந்தியா வருகிறார்: மோடியை சந்திக்க திட்டம்

ஜப்பானை சேர்ந்த சுஸுகியின் துணை நிறுவனமாக செயல்படும் மாருதி கார் நிறுவனம் தொழிலாளர் பிரச்னையில் சிக்கி தவிக்கிறது. கடந்த மாதம் தொழிலாளர்கள் நடத்திய வன்முறை சம்பவங்களால் அந்த நிறுவனத்துக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி நிறுவனத்தின் தலைவர் ஒஸாமு சுஸுகி ஒரு வார பயணமாக இன்று இந்தியா வருகிறார். குர்கான் ஆலையில் நாளை காலை நடைபெறும் கூட்டத்தில் மூத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் மானேசர் வன்முறை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்துகிறார்.
இதைத்தொடர்ந்து, நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார். குஜராத் மாநிலத்தில் ரூ.4,000 கோடியில் கட்டப்பட இருக்கும் புதிய ஆலை குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர், புதிய ஆலை கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்டிருக்கும் 700 ஏக்கர் பரப்பளவு நிலத்தையும் அவர் பார்வையிடுகிறார்.
வரும் ஞாயிற்றுக் கிழமை ஹரியானா மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவையும் சந்தித்து பேசுகிறார். அப்போது, மானேசர் ஆலையின் தொழிலாளர் பிரச்னை, அம்மாநிலத்தில் எதிர்கால திட்டங்கள், முதலீடுகள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார்.
வருகிற 28ந் தேதி மாருதி நிறுவனத்தின் ஆண்டு கூட்டம் நடைபெறுகிறது. இதில், ஒஸாமு சுஸுகி கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது சுற்றுப் பயணத்தின்போது இந்தியாவுக்கான ஜப்பானிய தூதரக அதிகாரிகளையும் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
மானேசர் ஆலை பிரச்னையால் மாருதிக்கு இதுவரை ரூ.2,700 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில், சுஸுகி நிறுவனத் தலைவரின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications