முடிவுக்கு வந்த டாடா- ஃபியட் கூட்டணி

இத்தாலியை சேர்ந்த ஃபியட் நிறுவனம் இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கார் விற்பனை செய்து வருகிறது. ஃபியட் நிறுவனத்தின் கார் விற்பனை மற்றும் சர்வீஸ் தொடர்பான விவகாரங்கள் டாடா மோட்டார்ஸ் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் வந்த நிறுவனங்கள் எல்லாம் விற்பனையில் சக்கை போடு போட்டு வரும் நிலையில், நீண்ட காலமாக இருந்தும் ஃபியட் நிறுவனத்தால் எந்தவொரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் எட்ட முடியவில்லை.
இதற்கு டாடா தனது கார் விற்பனைக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று ஃபியட் கருதியது. இதையடுத்து, தனித்து இந்திய மார்க்கெட்டில் விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர்களை அமைக்க ஃபியட் முடிவு செய்தது.
இதுகுறித்து நேற்று இரு நிறுவனங்களும் முறைப்படி அறிவித்துள்ளன. விற்பனை மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்கை இனி ஃபியட் நிறுவனமே பார்த்துக்கொள்ளும் என்று டாடா தெரிவித்துள்ளது.
அதேவேளை, ரஞ்சன்கவுனிலுள்ள டாடா ஆலையில் தொடர்ந்து ஃபியட் கார் உற்பத்தி நடைபெறும் என்று இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. இதனிடையே, டாடா மோட்டார்ஸ் டீலர்களை வைத்தே புதிய டீலர்கள் திறக்க ஃபியட் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்மூலம், வேகமாக டீலர்களை அமைக்க முடியும் என்று அந்த நிறுவனம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








