ஐரோப்பிய கார்களுக்கு இறக்குமதி வரிச்சலுகை: டாடா கடும் எதிர்ப்பு

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு தற்போது காரின் விலையில் 101 சதவீதம் இறக்குமதி வரியாக விதிக்கப்படுகிறது. இதனால், இறக்குமதி செய்யப்படும் கார்களின் விலை இருமடங்கு அதிகம்.
இதைக்கருத்தில்க்கொண்டு, பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஒரு சில மாடல்களை தவிர, அனைத்து கார்களையும் இந்தியாவிலேயே அசெம்பிளிங் செய்து விற்பனை செய்து வருகின்றன.
இந்த நிலையில், ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியா இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் படி, ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு கணிசமான அளவு வரிச்சலுகை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதனால்,இறக்குமதி செய்யப்படும் கார்களின் விலை கணிசமாக குறையும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில், ஐரோப்பிய வரிச்சலுகை அளிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு டாடா மோட்டார்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் கணிசமாக குறையும் என்பதோடு, உள்நாட்டு கார் நிறுவனங்களின் வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று டாடா கூறியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவி்த்த டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் பிஎம்.தலாங் கூறுகையில், ஆஸ்திரேலியாவில் இதுபோன்று அளிக்கப்பட்ட சலுகைகளால், அந்த நாட்டில் கார் அசெம்பிளிங் பணிகள் வெகுவாக குறைந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டனை சேர்ந்த டாடாவின் துணை நிறுவனங்களான ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனங்களின் கார்களுக்கும் இறக்குமதி வரிச்சலுகை கிடைக்கும் என்ற போதிலும், டாடா மோட்டார்ஸ் இதற்கு எதிர்ப்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ஐரோப்பிய யூனியனுக்கு வரிச்சலுகைக அளிப்பதுபோல், தங்களுக்கும் வரிச்சலுகை அளிக்க வேண்டும் என்று ஜப்பான் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களும் கோருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆட்டோமொபைல் துறையினரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
டாடா மோட்டார்ஸ் தவிர, மாருதி,டொயோட்டோ,ஹோண்டா மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட கார் நிறுவனங்களும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








