எர்டிகாவை சோதனை செய்த டாடா: புதிய மினி எம்பிவி தயாரிக்க ஆயத்தம்

கடந்த பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி எர்டிகா எம்பிவி கார் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறைந்த விலையில் நிறைந்த அம்சங்களை கொண்டிருப்பதால் எர்டிகாவுக்கான மவுசு நாளுக்கு நாள் கூடி வருகிறது.
இதையடுத்து, பல முன்னணி நிறுவனங்கள் புதிய காம்பெக்ட் எம்பிவி காரை களமிறக்க ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில், புதிய மினி எம்பிவி காரை டாடா வடிவமைத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக, எர்டிகா காரை தனது வாகன வடிவமைப்பு ஆராய்ச்சி மையத்தில் வைத்து டாடா மோட்டார்ஸ் ஆய்வுகள் மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆட்டோமொபைல் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
டொயோட்டா இன்னோவாவுக்கு போட்டியாக ஏற்கனவே ஆரியா எம்பிவி காரை டாடா விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், எர்டிகா விற்பனையில் நல்ல வளர்ச்சியை பதிவு செய்து வருவதால் டாடா மோட்டார்ஸ் இந்த மார்க்கெட்டின் மீது கண் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய மினி எம்பிவியை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி எர்டிகா, மஹிந்திரா ஸைலோ உள்ளிட்ட கார்களுக்கு இது நேரடி போட்டியாக வரும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications